விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவ்வரிசையில் நன்றியுணர்ச்சிக்குப் பெயர் போன நாயை மையமாக வைத்து தமிழில் ஒரு புதிய படம் உருவாகியுள்ளது.
பெயரிடப்படாத இப்படத்தை தனது ‘கனா புரொடக்சன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் இயக்குநரான விக்கி.
இப்படத்தில் பயிற்சி பெற்ற ‘ஜான்சி’ என்ற போலீஸ் நாய் கதையின் நாயகனாக நடித்துள்ளது. திரை நட்சத்திரங்களை எடுத்துக் கொண்டால் எஸ்.ஏ.சந்திரசேகர், பாலாஜி சக்திவேல், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, சத்யன், அயலி மதன், இந்திரஜா ரோபோ சங்கர், ஜார்ஜ் மரியான், கவிதா பாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவை ‘தலைக்கூத்தல்’ படத்தின் ஒளிப்பதிவாளரான மார்டின் டான்ராஜும், படத் தொகுப்பை பல தேசிய விருதுகளை வென்ற பி.லெனின் அவர்களும், கலையை அ.வனராஜும் மேற்கொண்டுள்ளனர்.
இந்தப் புதிய படத்தை அறிமுக இயக்குநரான நிதின் வேமுபதி இயக்கியிருக்கிறார். இவர் உக்ரைனில் மருத்துவப் படிப்பு முடித்தவர். சினிமா மீதுள்ள தீராக் காதலால் மருத்துவப் பணியை விட்டுவிட்டு தமிழ்நாட்டிற்கு வந்து பல குறும் படங்களை இயக்கி, இப்பட வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.
சமீபத்தில் வெளியாகி சக்கைக்போடு போடும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ போல இப்படமும் கொடைக்கானல் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது.
“மனிதர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடுவது என்பது இயல்பு. ஒரு நாய் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துத் தானே போராடுவதுதான் இக்கதையின் சிறப்பம்சம்” என்கிறார் இப்படத்தின் இயக்குநர் நிதின் வேமுபதி.