தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘முந்திரிக்காடு.’
இந்தப் படத்தில் இயக்குநர் சீமான், போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்தின் நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரான C.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – G.A.சிவசுந்தர், இசை – A.K. பிரியன், பாடல்கள் – கவிபாஸ்கர், படத் தொகுப்பு – எல்.வி.கே.தாஸ், கலை இயக்கம் – மயில் கிருஷ்ணன், சண்டை இயக்கம் – லீ.முருகன், தயாரிப்பு மேற்பார்வை – டி.ஜி. ராமகிருஷ்ணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மு.களஞ்சியம்.
படம் பற்றி இயக்குநர் மு.களஞ்சியம் பேசும்போது, “முந்திரிக்காட்டு பகுதி மக்களின் வாழ்கை யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலையுயர்ந்த பொருளாக மாறிப் போன முந்திரியின் விளைநிலங்களில், சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதும். அங்கே காதல் வயப்பட்ட இருவரின் காதலுக்கு ஊரே எதிர்ப்பு தெரிவிக்க, காக்கி சட்டைக்கே உரிய கௌரவத்தை காப்பாற்றும் அன்பரசன் அந்த காதலர்களை சேர்த்து வைக்க எடுத்த முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா என்பதுதான் கதை.
தஞ்சை மாவட்டம், நெல்லை மாவட்டம் மற்றும் ஆந்திராவின் நகரி மற்றும் சென்னை போன்ற இடங்களிள் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கடலூர், பாண்டி உட்பட பல இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது..” என்றார்.