‘நாடோடிகள்’, ‘ஈட்டி’, ‘மிருதன்’, போன்ற வெற்றி படங்களை தயாரித்த குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள அடுத்த படைப்பு ‘கீ’ திரைப்படம்.
இது குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாகும்.
இப்படத்தில் கதாநாயகனாக ஜீவாவும், நாயகியாக நிக்கி கல்ராணியும் நடித்துள்ளனர். மேலும் அனைகா சோடி, R.J.பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத் தொகுப்பு நகூரன். கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார் காலீஸ் . இவர் இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 12-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதையொட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் ஜீவா, நாயகி நிக்கி கல்ராணி, தயாரிப்பாளர் சேவியர் மைக்கேல் ராயப்பன், ஒளிப்பதிவாளர் அபிநந்தன், படத் தொகுப்பாளர் நகூரன், கலை இயக்குநர் மற்றும் படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நாயகன் ஜீவா பேசும்போது, “அருமையான கதையைக் கொண்டது இத்திரைப்படம். தற்போதைய டெக்னாலஜியில் வளர்ந்து வரும் பிரச்சனையை கூறும் படமாக அமைந்துள்ளது.
நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நான் கடந்த சில வருடங்களாக வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நிக்கி கல்ராணியைப் பார்த்த பின்புதான் வருடத்திற்கு பல படங்கள் பண்ண வேண்டும் என எண்ணம் என் மனதில் தோன்றியது.
படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தை மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூரியா நடித்துள்ளார். மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் என்னுடன் நடித்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, அனைகா சோடி இருவரும் அருமையாக நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் படத்திற்கு அருமையாக இசையமைத்துள்ளார். சரியான தருணத்தில் கூப்பிட்ட நேரத்தில் வந்து ஒளிப்பதிவினை மேற்கொண்ட அபிநந்தன் அவர்களுக்கு என் நன்றிகள். சிறப்பான பணியைச் செய்துள்ளார். இவருடைய தயவால் படத்தின் காட்சிகள் அனைத்தும் மிக பிரமாண்டமாக வந்துள்ளது. படத் தொகுப்பாளர் நாகூரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
காலீஸ் சிறந்த இயக்குநர். இவர் போன்ற நிறைய இளைய புதுமுக இயக்குநர்கள்தான் நம் தமிழ் சினிமாவிற்கு இப்போதைக்கு தேவை. புதிய, இளைய இயக்குநர்கள் வந்தால்தான் புதிய எண்ணங்கள் தோன்றும். புதிய எண்ணங்கள் இருந்ததால்தான் பல பரிமாணங்களில் திரைப்படங்களை தர முடியும்…” என்றார்.
நடிகை நிக்கி கல்ராணி பேசும்போது, “மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த படம் வருகிறது என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவர்களுக்கும் இயக்குநர் காலீஸ் அவர்களுக்கும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
4, 5 வருடங்களாக இந்த படத்தை ஒரு குழந்தை போல் பாதுகாத்து வந்துள்ளனர். வரும் ஏப்ரல் 12-ம் தேதி படம் வெளியாகிறது. இப்படம் மிகப் பெரிய வெற்றியடையும் என முழுமையாக நம்புகிறேன். காலீஸ் ஒரு மிகச் சிறந்த இயக்குநர். ஜீவாவுடன் நான் நடித்த முதல் படம் இதுதான். ஆனால் கலகலப்பு-2 படம் முதலில் ரிலீஸ் ஆகிவிட்டது.
இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். கேமராமேன் அபிநந்தனின் ஒளிப்பதிவு மிகப் பிரமாதமாக வந்துள்ளது.. உங்கள் அனைவரது ஆதரவாலும் அன்பினாலும் படம் மாபெரும் வெற்றி வெற்றி அடையும் என நம்புகிறேன்..” என்றார்.
இயக்குநர் காலீஸ் பேசும்போது, “இந்த படம் வெளிவர கடைசிவரை உறுதுணையாக இருந்த நடிகர் ஜீவா, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நிக்கி கல்ராணி ஒரு சின்சியரான நடிகை. அருமையாக நடித்துள்ளார். படப்பிடிப்புக்கு விரைவாகவே வந்து விடுவார். அபிநந்தனின் ஒளிப்பதிவு, நகூரனின் படத் தொகுப்பு என அனைவரும் அருமையாக வேலை செய்துள்ளனர். வில்லனாக நடித்துள்ள பத்ம சூர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
செல்போன்கள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது. நான்கு வயது குழந்தை ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் அந்த குழந்தைக்கு இந்தப் படத்தைக் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். எழுபது வயது முதியவர் செல்போன் பயன்படுத்தினால் அவரும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.
நாம் செய்யும் லைக்குகள், நாம் செய்யும் ஷேர்கள் இவற்றால் நடக்கும் பின்னணி என்ன என்பதை எடுத்து கூறும் படம் இது. ஏப்ரல் 12-ம் தேதி படம் வெளிவருகிறது உங்களின் அனைவரின் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன்…” என்றார்.