2-டி நிறுவனத்தின் சார்பில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யா, ‘உறியடி-2’ படத்தின் நாயகனும், இயக்குநருமான விஜயகுமார், படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார், படத் தொகுப்பாளர் பினு, படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, நடிகர்கள் ராஜ் பிரகாஷ், சங்கர்தாஸ், பாடலாசிரியர் நாகராஜ், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், விநியோகஸ்தர் சக்தி வேலன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவின் துவக்கத்தில் விழாவிற்கு வருகை தந்தவர்களை இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் வரவேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், “இந்த ‘உறியடி-2’ திரைப்படம் எங்களுக்கு ஒரு ஸ்பெஷலான படம். ‘உறியடி’ படத்தின் இயக்குநரான விஜயகுமாரை சந்தித்தபோது அவர் சொன்ன ஒன்லைன் எங்களை பெரிதும் கவர்ந்தது.
‘உறியடி’ படத்தின் முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் சமூகத்துக்கு தேவையான அழுத்தமான செய்தி ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி 35 நாட்களுக்குள் நிறைவு செய்தார் இயக்குநர் மற்றும் அவரது குழுவினர். இதற்காகவும் அப்படத்தின் இயக்குனர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்...” என்றார்.
விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், “நிறைய உழைக்க வேண்டும் என்று எண்ணம் உள்ளவர்களுக்கு சூர்யாவின் 2-டி நிறுவனத்தின் வாய்ப்பு உறுதி என்பது இதன் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.
‘உறியடி’ படத்தின் முதல் பாகத்தில் இயக்குநர் மற்றும் அவரது குழுவினர் காட்டிய உழைப்பு மற்றும் உண்மைக்காக ‘உறியடி-2’ படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது எனலாம்.
சமுதாயத்தில் நடைபெறும் அவலங்களை இளைஞர்களின் பார்வையில் எப்படி தீர்வு காண முடியும். எப்படி அதனை முன்னெடுக்க முடியும். என்ற வகையில் உருவான படம்தான் இந்த ‘உறியடி-2...” என்றார்.
படத்தின் இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசுகையில். “இந்தப் படத்திற்காக இசையமைக்க இயக்குனர் விஜயகுமார் என்னுடன் தொடர்பு கொண்டபோது, நான் ‘96’ படத்தின் இசையமைப்பு பணியை தொடங்கவில்லை.
இந்தப் படத்தின் பாடல்களுக்கு இசையமைத்து, பின்னணி இசையமைத்து, கிட்டத்தட்ட இறுதி நிலையில்தான் படத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் படத்தை பார்வையிட்டார். அதுவரைக்கும் எனக்கு படைப்பு சுதந்திரம் இருந்தது. இயக்குநரும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
அவரைப் போன்ற ஒரு பெருந்தன்மையான – நேர்மையான - உண்மையான மனிதரை காண்பது அரிது. அவர் ஒரு அரிய ஜீவன். இந்த படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாது. ஆனால் அவர்களின் உறக்கத்தை கெடுக்கும். அப்படியொரு வீரியுமுள்ள படைப்பு இது...” என்றார்.
படத்தின் இயக்குநரான விஜயகுமார் பேசுகையில். “இசையமைப்பாளரைத் தேர்வு செய்யும் முன் ஒரு மூன்று விஷயங்களை மனதில் கொள்வோம். ஈகோ இருக்கக் கூடாது. திறமை இருக்க வேண்டும். டெடிகேஷன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். இந்த மூன்றும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவிடம் இருந்தது.
இந்த படத்தில் மூன்று பாடல்கள் மற்றும் ஒரு செய்யுள் (POEM) இசையமைத்திருக்கிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜேனரில் இருக்கும். முதன்முறையாக இந்த படத்தில் இரண்டு பாடல்களை கோவிந்த் வசந்தா பாடியிருக்கிறார்.
நடிகர் சூர்யா ஏன் ‘உறியடி-2’-வை தயாரிக்க வேண்டும், என்று நிறைய பேர் கேட்கிறார்கள். கேட்க நினைக்கிறார்கள். நடிகர் சூர்யா மக்கள் மீதும் சினிமா மீதும் பேரன்பு கொண்ட மனிதன். அவரது நம்பிக்கையை ‘உறியடி-2’ படம் நிச்சயமாக காப்பாற்றும்.
இந்தப் படம் மக்களுக்கான படம். தமிழ்த் திரையுலகிலுள்ள ஒவ்வொரு இயக்குநரும், ஒவ்வொரு நடிகரும் இந்த நிறுவனத்தில் படம் பண்ண வேண்டும் என்ற கனவு இருக்கிறது. ஏவி.எம். நிறுவனத்தை போல் ஒரு படத்தை தொடங்கியது முதல் அதனை திரைக்கு கொண்டுவந்து கொண்டு வருவதுவரை சரியான திட்டமிடல் இந்த நிறுவனத்தில் இருக்கிறது.
படத்தில் பணியாற்றிய தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு நன்றியை கூறி படைப்பை எனதாக்கிக் கொள்ள விரும்பவில்லை. தென்காசியில் படப்பிடிப்பு நடைபெற்ற பொழுது, ஒரு கலவர காட்சியை படமாக்கினோம். அப்போது உதவி இயக்குநர்களை போலீசாக நடித்தவர்களிடம் உண்மையான தடியைக் கொடுத்து அடிக்க வேண்டும் என்று சொன்னோம்.
அதேபோல் உதவி இயக்குநர்கள் யார் என்பதையும் போலீஸ்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, காட்சியின்போது உதவி இயக்குநர்களிடம் ‘கையைத் தூக்குங்க’ என்று ஒரு சைகையை சொல்லியிருந்தோம். ஆனால் படப்பிடிப்பு நடந்தபோது அந்த கூட்டத்தில் உள்ளவர்கள், துணை நடிகர்கள், ஒவ்வொருவரும் அவர்கள் கையை தூக்கி அந்த அடியை வாங்கிக் கொண்டு இந்த காட்சியை உயிர்ப்புடன் படமாக்க உதவி புரிந்தார்கள்.
அதற்காக யாருக்கும் நன்றியை தெரிவிக்க விரும்பவில்லை. இது அனைவருக்குமான படம் என்பேன். அத்துடன் இந்த படத்திற்காக நீங்கள் செலவழிக்கும் நேரத்தையும், பணத்தையும், புத்திசாலித்தனத்தையும் 100 சதவீதம் மதிக்கும் ஒரு படமாக ‘உறியடி-2’ இருக்கும்...” என்றார்.
நடிகர் சூர்யா பேசுகையில், “நான் நடிக்கும் படத்தின் வெளியீடு தாமதமாகிக் கொண்டே போனாலும், இது போன்று சந்தர்ப்பங்களில் உங்களை எல்லாம் சந்திப்பது சந்தோஷமாக இருக்கிறது.
கேரளாவில் நடைபெற்ற ஒரு விழாவிற்கு சென்றிருந்தேன். அங்குதான் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவை சந்தித்தேன். அவருடைய இசையையும், வீடியோவையும் பார்த்தேன். அதில் ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆனால் அவர் இவ்வளவு தெளிவாக பேசியது என்னை ஈர்த்தது.
அவர் படத்தைப் பற்றி கூறிய வார்த்தை, ‘இந்த படம் உங்களை எண்டர்டெயின் பண்ணாது. ஆனால் டிஸ்டர்ப் பண்ணும்’ என்று சொன்ன வார்த்தைகள் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இருந்தது.
இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுடன் தொடர்ந்து 2-டி நிறுவனம் பயணிக்கும். அத்துடன் எங்கள் நிறுவனத்தில் முதன் முதலாக அவர் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார் அதுவும் எங்களுக்கு சந்தோஷமே.
இங்கு வந்தவுடன் ஒரு தொழில் நுட்ப கலைஞர் என்னிடம் ‘நீங்கள் ‘காக்க காக்க’ படத்தில் நடிக்கும்போது, நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தே சார்’ என்று சொன்னபோது, என்னுள் நாம் சீனியராகி விட்டோமோ என்ற எண்ணம் எழுந்தது.
இதுவரை திரையில் நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேனோ அவை எல்லாம் இயக்குநர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் கற்பனையில் உருவானது. எங்களுக்கான அடையாளம், இமேஜ் இதெல்லாம் தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் அளித்தது.
இந்நிலையில் அவர்களுடைய வேலையில் சென்று குறுக்கீடு செய்யவும், ஆலோசனை செய்யவும், என்னை நான் தகுதிப்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். அது தேவையற்றது என்றும் நினைக்கிறேன்.
ஆனால் நல்ல விஷயங்களை ரசிக்க பிடிக்கும். நல்ல விசயங்களுக்கு துணையாக உடன் நிற்க பிடிக்கும். எனக்கான நிலையிலிருந்து, என்ன வகையான உதவிகளை செய்ய முடியுமோ, அதைத்தான் இந்த படத்திற்கு செய்திருக்கிறேன்.
2-டி நிறுவனம் இதுவரையிலும் 10 படங்களுக்கு மேல் தயாரித்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் அவரது குழுவினரின் உழைப்புதான்,
இயக்குநர் விஜயகுமார், என்னைப் போலவே அவரும் ஒரு இன்ட்ரோவெர்ட் (introvert). மனதில் நினைத்ததை டக்கென்று வெளிப்படுத்த மாட்டார். விவாதிக்க மாட்டார். அனைத்தையும் புரிந்து கொள்வார். ஒரு அறிமுகத்திற்கு பிறகு இயக்குநர் விஜயகுமாரின் ‘உறியடி’யை பார்த்தேன்.
அதன் பின்னர் அவருடைய முதல் சந்திப்பிலேயே நான் எப்படி ராஜா சாருடன் பழகுகிறேனோ அதேபோல் இயக்குனர் விஜயகுமாரிடமும் பழகினேன். ஒருவர் சினிமாவுக்காக இவ்வளவு உண்மையாக இருக்க முடியுமா...? என்ற பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் என்னுள் ஏற்படுத்தினார்.
ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதனுள் எவ்வளவு தூரம் உண்மையாக பயணிக்க முடியும் என்பதையறிந்து, அந்தளவிற்கு பயணித்து அதை வெளிக்கொணர்பவர் விஜயகுமார். அவர் சினிமாவிற்காக குடும்பத்தை விட்டு பிரிந்து, குழந்தைகளை விட்டுப் பிரிந்து, இவ்வளவு நேர்மையாக இருக்கும் ஒருவரை நான் விஜயகுமாரிடம் பார்த்தேன்.
எங்க அப்பா படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததில்லை. எனக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்டது கிடையாது. ஒரு இயக்குநரைகூட சந்தித்தது கிடையாது. கதை கேட்டது கிடையாது. தயாரிப்பாளரை சந்தித்தது கிடையாது. இருந்தாலும் நான் ஒரு நடிகரின் மகன் என்ற அடையாளம் எனக்கிருக்கிறது.
ஆனால், எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் ‘உறியடி’ என்ற படத்தை எடுத்த விஜயகுமார் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதை நான் பாராட்டுகிறேன். திரையில் ஒரு ஒரு உண்மை வெளிப்பட்டது. அதன் ஆயுள் அதிகம்.
‘உறியடி’ வந்து நான்கைந்து வருடங்களுக்கு பிறகு, எங்களது 2-டி நிறுவனத்தின் மூலமாக ‘உறியடி-2’ படம் உருவானதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் எண்டர்டெயின் பண்ணாது. நிச்சயமாக டிஸ்டர்ப் பண்ணும். யோசிக்க வைக்கும். எப்போதும் போல் நியாயமான தீர்ப்பை வழங்கும்படி திரைப்பட ரசிகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்...” என்றார்.
இறுதியாக படத்தின் டீஸர் மற்றும் பாடல்களை நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யா வெளியிட்டார்.