கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி நடித்து வருபவர் நடிகர் கார்த்தி. தற்போது அவர், இயக்குநர் P.S.மித்ரனுடன் முதன்முறையாக இணைகிறார்.
வித்தியாசமான கதை அமைப்பில் உருவான ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரான P.S.மித்ரன்தான், கார்த்தியின் அடுத்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.
பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S.லக்ஷ்மன்குமார் மிகப் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கிறார்.
இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – ஜார்ஜ் Cவில்லியம்ஸ், படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – கதிர், நிர்வாக தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை – பிரசாத், மக்கள் தொடர்பு – ஜான்சன்.
பிரமாண்டமான ஆக்ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு உருவாகும் இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள், படப்பிடிப்பு போன்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
இன்று தீபாவளி நன்னாளில் இத்திரைப்படத்தின் முதல் நிகழ்வாக பாடல் பதிவு பூஜை நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது.