CPS பிலிம்ஸ் மற்றும் அப்பு ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘களிறு.’
இந்த படத்தில் விஷ்வக் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக அனுகிருஷ்ணா, தீபா ஜெயன் ஆகியோர் நடித்துள்ளனர். மற்றும் துரை சுதாகர், நீரஜா, சிவம், ஜீவா, அப்பு, தீப்பெட்டி கணேஷன், காதல் அருண், ஜான், உமாரவி, உமா ரவிச்சந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – விஷ்வக், இனியவன், ஒளிப்பதிவு – D.J.பாலா, இசை – N.L.G.சிபி, கலை – மார்டின் டைட்டஸ், பாடல்கள் – தமிழ் ஆனந்த், பா.முகிலன், ராஜ்சொந்தர். சண்டை பயிற்சி – S.R.முருகன், படத் தொகுப்பு – நிர்மல், நடனம் – ராதிகா, தயாரிப்பு மேற்பார்வை – G.முருகபூபதி, மக்கள் தொடர்பு – V.K.சுந்தர், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – G.J.சத்யா.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் ஜி.ஜெ.சத்யா, “சமீப காலங்களில் காதலித்து கல்யாணம் செய்தாலும் ஒரே ஜாதியில்தான் செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்தக் காதலர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அப்படி நடக்கின்ற கொலைகள் தற்கொலைகளாகவும் மாற்றப்படுகின்றன.
இது போன்ற கவுரவக் கொலைகளையும், அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதையும் வெளிச்சம்போட்டுக் காட்டும் படம்தான் இந்த ‘களிறு’ திரைப்படம்.
இந்த சாதியக் கொலைகள் காதலுக்காக மட்டும் நடப்பதில்லை. பொருளாதாரக் காரணங்களுக்காகவும் சாதியக் கொலைகள் நடக்கின்றன. அவைகள் மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்படுகின்றன.
இத்திரைப்படம் சாதியக் கொலை சம்மந்தமான படம் என்பதால் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கோ, ஆதிக்க சாதிகளுக்கு எதிராகவோ எடுக்கப்பட்ட படம் இல்லை. எதார்த்தத்தை மீறாத ஒரு கிராமத்து வாழ்வியலை காட்சிகளின் வழியியே கண் முன் நிறுத்துகிறது இப்படம்.
சாதிய கௌரவத்திற்காக கொலை செய்கிறார்கள் அப்படி செய்த பிறகு அவர்களின் சாதிய கெளரவம் திரும்ப கிடைத்து விடுகிறதா…? அதிகாரமும், பண பலமும் இருக்கிறதால்தான் இது சாதிய கவுரவக் கொலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இது மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும். இதை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளையும் அடையாளப்படுத்தி மக்களை விழிப்படைய செய்யவே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது…” என்றார் இயக்குநர்.