திரைப்பட விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக உயர்ந்து, ‘கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ்’ சார்பில், நயன்தாரா நடித்த ‘அறம்’, ‘ஐரா’, மற்றும் பிரபுதேவா நடித்த ‘குலேபகாவலி’ ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்தவரும், அஜித்தின் ‘விசுவாசம்’ திரைப்படத்தை தமிழகத்தில் விநியோகித்தவருமான தயாரிப்பாளர் கே.ஜே.ராஜேஷ், தற்போது சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் ‘ஹீரோ’ படத்தை தயாரித்து வரும் நிலையில், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக ‘க/பெ ரணசிங்கம்’ என்கிற திரைப்படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நாயகன், நாயகியாக நடிக்கவுள்ளனர்.
மேலும் இப்படத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி, யோகி பாபு, வேலா ராமமூர்த்தி, ‘பூ’ ராம் ஆகிய பன்முகப்பட்ட கலைஞர்கள் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமாரின் தங்கையான பவானி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
ஒளிப்பதிவு – சுதர்ஷன், இசை – ஜிப்ரான், பாடல்கள் – வைரமுத்து, படத் தொகுப்பு – சிவா நந்தீஸ்வரன், கலை இயக்கம் – லால்குடி என்.இளையராஜா, சண்டை இயக்கம் – பீட்டர் ஹெயின்
‘அடங்காதே’ படத்தின் இயக்குநரான சண்முகம் முத்துசாமி இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார்.
இயக்குநர் செல்வாவிடம் துணை இயக்குநராக தனது திரைப் பயணத்தை துவங்கி, ‘அறம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் இணை-துணை இயக்குநராகப் பணியாற்றிய பெ.விருமாண்டி இப்படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
இவர் தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த பெரிய கருப்பு தேவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ராமநாதபுரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து படத்தின் பிற முக்கிய காட்சிகள் ஹைதராபாத், சென்னை மற்றும் துபாயில் நடைபெற இருக்கிறது.