“அ முதல் ஃதானடா.. இவ எவர்சில்வர் தட்டுதானடா!” என்ற ‘ஜித்தன்’ படப் பாடலை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது. தற்போது மீண்டும் அதே உற்சாகத்துடன் நடிகர் ரமேஷின் ‘ஜித்தன் 2’ திரைப்படம் வெளியாக உள்ளது.
புதுமுக இயக்குநர் ராகுல் பரமஹம்சா இப்படத்தை இயக்க, வின்சென்ட் செல்வா கதை, வசனம் எழுதியுள்ளார். மேலும் சிருஷ்டி டாங்கே, மயில்சாமி, ரோபோ ஷங்கர், கருணாஸ் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டனின் உதவியாளர் S.K.மிட்ஷெல் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் ஏப்ரல் 8-ம் தேதி வெளியாகிறது.
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. படத்தில் பங்கு கொண்ட கலைஞர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.
“என் வாழ்க்கையில் எனக்கு ஓர் மைல் கல்லாக அமைந்த திரைப்படம் ‘ஜித்தன்’. அன்று முதல் இன்றுவரை ‘அ முதல் ஃதானடா’, பாடல் ஒலிக்காத கச்சேரியே கிடையாது. அதுபோல் 10 மடங்கு அதிகம் ஈர்க்கவுள்ள நச்சென்று ஒரு குத்து பாடலை இந்த படத்திற்காக இசையமைத்துள்ளேன். மேலும் வெளிநாட்டில் இருந்து பின்னணி இசைக்காக வரவழைக்கப்பட்ட சவுண்ட் ட்ராக்ஸ் படத்திற்கு கூடுதல் பலத்தை தரும்…!” என்கிறார் கலகலப்பான இசையமைப்பாளரான ஸ்ரீகாந்த் தேவா.
“படத்தின் கதைப்படி முதல் பாகத்தில் இறந்து போன ரமேஷ், இந்த பாகத்தில் மீண்டும் பிறந்து, பேயுடன் மாட்டிக் கொண்டு வாழும் தருணங்களே ‘ஜித்தன்-2’வின் கதைக் கரு. இந்த திரைப்படம் நிச்சயமாக ரசிகர்களின் மனதை வென்று, அவர்களின் உள்ளங்களில் இடம் பிடிக்கும்..” என்கிறார் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இயக்குநர் வின்சென்ட் செல்வா.
படத்தின் அறிமுக இயக்குநரான ராகுல் பரமஹம்சா கூறுகையில், “பொதுவாக பேய் என்றால் பயம் மட்டும்தான் என்று நினைத்து வருகிறார்கள். ஆனால், அதற்கு அப்பாற்பட்டு வேறு சில விஷயங்களும் உள்ளது என்ற கருத்தை புதிய கோணத்தில் இந்த படத்தின் மூலம் கூறியிருக்கிறோம்..” என்கிறார்.
மொத்தத்தில் ‘ஜித்தன்-2’ அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.