‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மீண்டும் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
சமீபத்தில் சில மாதங்களாக உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்னரும் வீட்டிலும் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார்.
தற்போது முற்றிலும் குணமான நிலையில் தான் ஏற்கெனவே நடித்துக் கொண்டிருந்த படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
அந்த வரிசையில் முதல் படமாக இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கி வரும் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இது குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எப்போதும் ஒரு சிறந்த படத்தை உருவாக்குவதற்கே நான் முனைகின்றேன். இம்முறை சிறந்த தொழில் நுட்பம் மற்றும் நடிப்பு கலைஞர்களுடன் இணைந்து ‘கருமேகங்கள் கலைகின்றன’ எனும் திரைப்படத்தை சிதையாமல் உருவாக்கிட பாடுபடுகின்றேன்.
பாதிக்கு மேல் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் பாரதிராஜா அவர்களின் உடல் நலம் குன்றியதால் அனைத்து பணிகளும் கடந்த 130 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இப்பொழுது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
எண்ணற்ற இடையூறுகளைத் தாண்டி ஒவ்வொரு நாளும் முழுமூச்சுடன் உழைத்துக் கொண்டிருக்கிறோம்… உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளோடு!!” என்று குறிப்பிட்டுள்ளார்.