கௌதம் கார்த்திக், நிக்கி கல்ரானி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தை புதுமுக இயக்குநரான சந்தோஷ் P.ஜெயக்குமார் இயக்கியுள்ளார்.
படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் டிரெயிலரை பார்த்தவர்களும், விழா மேடையில் நடந்தவைகளையும் பார்த்தபோது இந்தப் படம் இன்னொரு ‘த்ரிஷா இன்னொரு நயன்தாரா’தான் என்று அடித்துச் சொல்கிறார்கள்.
இப்போதே அந்த அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் இயக்குநரான சந்தோஷ் பி.ஜெயக்குமார் படம் பற்றி பேசும்போது, “இந்தப் படம் ‘ஏ’ சர்டிபிகேட் பெற்ற அடல்ட்ஸ் ஒன்லி படம்தான். யாரும் குடும்பத்துடன் வர வேண்டாம்..” என்று வெளிப்படையாக கேட்டுக் கொண்டிருக்கிறார்.
‘ஹர ஹர மகாதேவகி’ படம் பற்றி இயக்குநரான சந்தோஷ் பி.ஜெயக்குமார் அளித்த பேட்டியில், “எங்களுடைய ‘ஹர ஹர மகாதேவகி’ திரைப்படத்தை வரும் செப்டம்பர்-29-ல் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய பொழுது போக்கான காமெடி படம். ‘ஏ’ சான்று பெற்ற படம். எனவே குடும்பதோடு பார்ப்பது அவரவர் விருப்பம்.
புதுமையான ஒன்றை இப்படத்தில் முயற்சித்துள்ளோம். முத்தக் காட்சி, கவர்ச்சி உடை அணிவது ஆபாசம். நண்பர்களால் பொது இடத்தில் பேச முடியாத ஒன்றை இயல்பாக பேசிக் கொள்வதுதான் இப்படத்தின் கதை.
இப்படத்தை விருப்பமானவர்களோடு சந்தோசமாக பார்க்கலாம். இயல்பு வாழ்க்கையை படமாக்கப்பட்டதால் இப்படத்தின் விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் கவலையில்லை. இப்படத்தை பார்த்து மக்கள் கெட்டு போவார்கள் என எனக்கு தோணவில்லை. ட்ரைலரை பார்த்தே இரட்டை வசனத்துடன் மிகவும் ஜாலியா இருக்கு என்று பலரும் சொன்னார்கள். அதன் தொடர்ச்சி படம் முழுவதும் இருக்கும். அதைத் தவிர்த்து வேறு எந்த தப்பான காட்சியும் இதில் இருக்காது.
இப்படத்தின் கதை பற்றி கூற வேண்டுமானால் கௌதம் ஒரு புதுமையான தொழிலை மேற்கொள்கிறார். நிக்கி கல்லூரி மாணவி. இரண்டு பேரும் ஒரு நாள் காலை தங்கள் காதலை பிரேக்கப் பண்றாங்க. அப்போ யாரையெல்லாம் சந்திக்காங்க? அவங்களுக்கு என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம். முதல் பாதி காதல்.. இரண்டாம் பாதி ஏன் பிரேக்கப் என்று பரபரப்பாக கதை நகரும்.
‘ஹர ஹர மஹாதேவகி’ என்ற விடுதியில் நடப்பதுதான் கதை. எனவே அதையே படத்தோட பெயரா வச்சிட்டோம். சென்சார்லயும் ‘ஏ’க்கு அனுமதி கொடுக்கும் அளவுக்கு படத்தை எடுத்திருந்தோம்.
சென்சார்லயும் பெண் அதிகாரிகளும் பார்த்துட்டு ‘நல்லா ஜாலியா இருக்கு’ன்னுதான் சொன்னாங்க. மற்றபடி படத்தில் ஒரு கருத்தும் கிடையாது.
கௌதம் கார்த்தி உட்பட 18 ஹீரோக்களுக்கு இப்படத்தின் கதையை கூறினேன். அவர்கள் அனைவருக்கும் இந்தக் கதை பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் அனைவரும் வெவ்வேறுவிதமான கதைகளை எதிர்பார்த்து இருந்ததால் அவர்களால் இந்த கதையில் நடிக்க முடியவில்லை.
18 பேருக்கு அப்புறம் கௌதம்தான் இதை கதையா பார்த்தாரு. தன்னோட அப்பா கார்த்திக் சாரோட ‘உள்ளத்தை அள்ளித் தா’ மாதிரி இருக்குன்னு கௌதம் பீல் பண்ணாரு.
கண்டிப்பாக இந்தப் படத்துக்கு பெண்களும் வருவாங்கன்னு எதிர்பார்க்கிறோம். இந்தப் படத்தோட பூஜையின்போதே கார்த்திக் சார்கிட்ட இருந்து வாழ்த்து வந்ததா கௌதம் சொன்னார். இதுவே எங்களுக்கு பெரிய விஷயம்தானே…” என்றார் பெரும் மகிழ்ச்சியுடன்.
நாயகி நிக்கி கல்ராணி பேசும்போது, “என்னுடைய எல்லா படத்தையும் போல இதுவும் நல்ல படம்தான். இந்த படத்தை பற்றி ஏன் அதிக பேச்சு வருகிறது என்றால் இந்த படம் ஒரு ‘அடல்ட் காமெடி’ படம்.
இந்த படத்தை மக்களுக்கான ஒரு பொழுது போக்கு படமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். இந்த படத்தில் நாங்கள் வேண்டுமென்றே டபுள் மீனிங் வசனங்கள் எதையும் வைக்கவில்லை. படத்தில் டபுள் மீனிங் வசனங்கள் சந்தர்ப்ப சூழ்நிலையில் வருவது போல்தான் இருக்கும்.
இந்தப் படத்தின் கதையை கேட்டு எனக்கு கதை பிடித்திருந்ததால்தான் நடித்தேன். இந்த படத்தில் யாரையும் தப்பாக காட்டுவது போல் காட்சிகள் இல்லை. வல்காரிட்டி இல்லாமல் இந்த படத்தை நாங்கள் எடுத்துள்ளோம்.
நாங்கள் படத்தைக்கூட அடல்ட் காமெடி என்றுதான் ப்ரொமோட் செய்கிறோம். நான் ஸ்வீட் பப்ளி காலேஜ் பெண்ணாக நடித்துள்ளேன். என்னை தப்பாக காட்டும் ஒரு படத்தில் நானே நடிக்க மாட்டேன். இந்தப் படத்தில் அப்படிப்பட்ட காட்சிகள் ஏதும் இல்லை. இந்த படத்தில் தேவையில்லாமல் அடல்ட் காமெடி எதுவும் இல்லை…” என்றார்.
நாயகன் கௌதம் கார்த்திக் பேசும்போது, “நான் ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் கதையை, ஒரு கதையாகத்தான் பார்த்தேன். இதுவொரு முழுமையான காமெடி எண்ட்டெர்டெய்னர்.
ஒரு இடத்தில் நான்கு நண்பர்கள் கூடினால் அவர்களுக்குள் எப்படி பேசிக் கொள்வார்களோ அதே போல்தான் இப்படத்தில் காட்சிகள் இருக்கும். இந்தப் படத்தை ஏன் குடும்பத்தோடு பார்க்கக் கூடாது என்று சொல்கிறோம் என்றால் , நாம் நம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் சில விஷயத்தை குடும்பத்தினர் முன்பு கண்டிப்பாக பேச மாட்டோம். அதனால்தான் இந்தப் படத்தை ‘அடல்ட்ஸ் ஒன்லி’ படம் என்று சொல்கிறோம்.
நான் ‘ஹர ஹர மஹாதேவகி’யையும் , ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படத்தையும் யூத் ஆடியன்ஸ் அனைவரையும் மனதில் வைத்துதான் தேர்ந்தெடுத்து நடித்துள்ளேன். இந்த இரண்டு படங்களில் நடிப்பது கண்டிப்பாக ஸ்டீரியோ டைப் ஆகாது என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.
நான் நிறைய கதைகளில் நடித்துள்ளேன். அதை போல்தான் இந்த படமும். இந்தப் படத்தின் கதையை கேட்டு அப்பா சிரித்தார். இந்த படம் அடல்ட் காமெடிதான். ஆனால், செக்ஸ்வல் காமெடி இல்லை. இங்கே யாருக்கும் அடல்ட் காமெடி பற்றிய சரியான புரிதல் இல்லை. ‘ஹர ஹர மஹாதேவகி’ இளைஞர்கள் ரசிக்கும் படமாக இருக்கும்..” என்றார்.













