ரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ் நேதாஜி பிரபு, கதை எழுதி தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒளடதம்’.
இந்தப் படத்தில் நாயகியாக டெல்லியைச் சேர்ந்த மாடல் சமீரா, இரண்டாவது நாயகனாக சந்தோஷ் நடித்திருக்கிறார்கள்.
மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகளைத் தயாரித்தல். அதனை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உதவியுடன் சட்ட விரோதமாக் சந்தைப்படுத்துதல் என்று விரியும் மெடிக்கல் திரில்லர் வகைப் படமான ‘ஒளடதம்’ படத்தை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ரமணி.
சென்னையைச் சேர்ந்த பிரபல நீரிழிவு மருத்துவரின் சுயலாபத்திற்காக, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் மருந்து தடை செய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த 10 நாட்களுக்குள் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களைத் துணிச்சலாகச் சொல்லி விழிப்புணர்வு செய்திருக்கிறார் இயக்குநர் ரமணி.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காக தீவிரமான ஆராய்ச்சி செய்து ‘ஒளடதம்’ கதையை எழுதியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அண்ணன் மகன் சண்முகசுந்தரம் இந்தப் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகிறார். சிங்கப்பூர் கலைவேந்தன், தமிழமுதன், சோ.சிவாகுமார் பிள்ளை, விஜயகிருஷ்ணன் ஆகியோரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தஷி இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்களை இயக்குநர் பேரரசு வெளியிட ‘குரங்கு பொம்மை’ படத்தின் இயக்குநர் நித்திலன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் கில்டு அமைப்பின் செயலாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் ஸ்ரீராம், கே.வி.குணசேகர், மக்கள் தொடர்பாளர் சங்க பொருளாளர் விஜயமுரளி, பெரு.துளசி பழனிவேல், ரஞ்சன், தமிழமுதன், திருமலை சிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படத்தைப் பார்த்து பிரமித்த கீழக்கரை அஜ்மல்கான், இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறார்.










