மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு புதிய தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹன்சிகா மோத்வானி.
தனுஷ் ஜோடியாக ‘மாப்பிள்ளை’ படத்தில் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கும் ஜோடியாக நடித்துவிட்டார். ஆனால் தற்போது அவரைவிடவும் இளமையான புதிய நடிகைகள் பலர் களத்தில் குதித்துவிட்டதால் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார்.
ஹன்சிகா கடைசியாக ‘மஹா’, ‘105 மினிட்ஸ்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே இன்னமும் வெளியாகவில்லை. இந்த நிலைமையில்தான் இப்போது புதிய தமிழ்ப் படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளார் ஹன்சிகா.
இந்தப் படத்தில் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார்.
இப்படத்துக்கு ‘ரவுடி பேபி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பல முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜா சரவணன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகுகிறார்.
செல்லதுரை ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். தீபக் துவாரகநாத் படத் தொகுப்பு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்த பூஜை நிகழ்ச்சியில் படக் குழுவினருடன் கவிஞர் வைரமுத்துவும் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்.









