‘எனிமி’ படத்தில் விஷாலுக்கு ஆர்யா வில்லனாக நடிப்பதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. இணைந்து நடிப்பது என்பது வேறு.. வில்லனாக நடிப்பது வேறல்லலவா..?
ஆர்யாவும் இப்போது ஹீரோவாகத்தான் நடித்து வருகிறார். அவர் நாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படம் ஓடிடியிலேயே சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஆர்யா நாயகனாக நடிக்கவுள்ளார்.
இந்த நேரத்தில் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க ஆர்யா எப்படி ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. இந்தக் கேள்வியை இயக்குநர் ஆனந்த் சங்கரிடம் கேட்டால் அவர் வேறு கதையைச் சொல்கிறார்.
இயக்குநர் ஆனந்த் சங்கர் இது குறித்துப் பேசும்போது, ‘‘இது ஹீரோ – வில்லன் படமே இல்லை. ஒரு ஹீரோ – வில்லன் கதையாக இருந்தால், ஹீரோவை வெச்சுதான் படம் இருக்கும். வில்லன் பிரச்னை கொடுத்துக்கிட்டே இருப்பான். அதை ஹீரோ எப்படி சமாளிச்சு வர்றார்ங்கிறதுதான் ரெகுலர் டெம்ப்ளேட்.
ஆனால், இந்தப் படம் அப்படியிருக்காது. ரெண்டு பேருடைய கேரக்டருக்குமே ஆழமான பின்னணி இருக்கும். விஷால் – ஆர்யா ரெண்டு பேருக்குள்ளேயும் நெகட்டிவ் ஷேட் இருக்கும். இவருக்கு அவர் ‘எனிமி.’ அவருக்கு இவர் ‘எனிமி.’ இவங்களுக்குள்ள என்ன பிரச்னை, அதுக்கான காரணம் என்ன என்ற பார்வையில்தான் கதை நகரும்.
ரெண்டு பேரும் ஆக்ஷன் சீன்ஸ்னா செம எனர்ஜி ஆகிடுவாங்க. டூப் போடவிடமாட்டாங்க. போட்டி போட்டுக்கிட்டு சண்டை போடுவாங்க…” என்று சொல்லியிருக்கிறார்.