கனகா வெங்கடேசன், சவீதா வெங்கடேசனின் சவீதா சினி ஆர்ட்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணப்பாவின் காவ்யா புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’.
இந்தப் படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம் பெற்ற ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ படத்தை இயக்கியவர். இவர் இயக்கியிருக்கும் இரண்டாம் படம்தான் ‘என் பெயர் ஆனந்தன்’.
‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தீபக் பரமேஷ், அரவிந்த் ராஜகோபால் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – மனோ ராஜா, இசை – ஜோஸ் பிராங்க்ளின், வீரையன், படத் தொகுப்பு – விஜய் ஆண்ட்ரூஸ், ரக்சன், பாடல்கள் – புருஷோத்தமன், இயக்கம் – ஸ்ரீதர் வெங்கடேசன், தயாரிப்பு : கனகா வெங்கடேசன், சவீதா வெங்கடேசன் மற்றும் கோபி கிருஷ்ணப்பா.
இந்தப் படத்தின் கதை ஆரம்பத்தில் த்ரில்லராக பயணித்தாலும், போகப் போக உணர்வுப்பூர்வமான பயணத்துக்குள் ரசிகர்களை அழைத்து சென்றுவிடும். காரணம், த்ரில்லருக்கென்றே உள்ள வழக்கமான கதைக் களங்களை தேர்வு செய்யாமல் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
குறிப்பாக இதுவரை யாருமே பேசியிருக்காத ஒரு சமூகப் பிரச்சனையை கையிலெடுத்து துணிச்சலாக இந்தப் படம் பேசியுள்ளது. படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம், இப்படியெல்லாம்கூட மக்கள் இருக்கிறார்களா, இவர்களுக்கு இப்படியெல்லாம்கூட பிரச்சனைகள் இருக்கிறதா என இந்தப் படம் நிச்சயம் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு புது முயற்சியாக இந்தப் படத்தில் கிளைமாக்ஸுக்கு சற்று முன்பாக 11 நிமிடங்கள் கொண்ட பாடல் காட்சி இடம் பெறுகிறது. இது வழக்கமான ஒரு பாடலாக இல்லாமல் உணர்வுப்பூர்வமான பாடலாக இருக்குமாம்.
செம்பல் சர்வதேச திரைப்பட விழா, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச திரைப்பட விழா மற்றும் தென் கொரியாவில் நடைபெற்ற SEE சர்வதேச திரைப்பட விழா ஆகிய விழாக்களில் கலந்து கொண்டு மூன்று முறை சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை இந்தப் படம் பெற்றுள்ளது. மேலும் நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான ஸ்பெஷல் ஜூரி விருதையும் பெற்றது.
“திரைப்பட விழாக்களில் இந்தப்படத்தை பார்த்த பலரும் இதுவரை பார்த்திராத, ஒரு வித்தியாசமான அதேசமயம் ஜனரஞ்சகமாக ரசிக்க கூடிய விஷயங்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறினார்கள். குறிப்பாக படத்தின் டேக்லைனில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, இது தனித்துவமான தமிழ்ப் படமாகவே உருவாகி இருக்கிறது என பாராட்டினார்கள்..
இந்தப் படத்தின் நாயகன் சந்தோஷ் பிரதாப்பின் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் மறக்க முடியாது ஒன்று.. ஒரு நாற்காலியிலேயே அமர்ந்தபடி, தனது நடிப்பை முகத்தின் உணர்ச்சிகளிலேயே விதம் விதமாக பிரதிபலித்து நடித்துள்ளார். நிச்சயம் இந்தப் படம் தமிழ்சினிமாவில் அவருக்கு அடுத்தப்படியாக இருக்கும்..” என்கிறார் இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன்.
தற்போது திரையரங்குகள் செயல்பட ஆரம்பித்துவிட்ட நிலையில், இந்தப் படம் வரும் நவ-27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
ஓடிடி தளங்கள் இந்தப் படத்தை வெளியிட தங்களை அணுகியபோதும் மறுத்துவிட்டார்களாம் தயாரிப்பாளர்கள்.
இது பற்றி இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன் பேசும்போது, “இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போதே நாங்கள் இரண்டு விஷயங்களில் உறுதியாக இருந்தோம்.. முதலில் படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிவிட்டு, அதன் பிறகே திரையரங்குகளில் ரிலீஸ் செய்வது, இரண்டாவதாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்த பின்னரே, ஒடிடிக்கு படத்தை தருவது என நாங்கள் முடிவு செய்தபடியே இந்தப்படத்தை தியேட்டர்களில் வெளியிடுகிறோம்..” என்றார்.