“தமிழ்ச் சினிமாவுலகம் உண்மையாகவே மூச்சுத் திணறுகிறது” என்று பிரபல திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் இயக்குநர் ரோஜின் தாமஸின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘ஹோம்’. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தைப் பார்த்த திரைப்பட விமர்சகர்கள் பலரும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். மேலும் பல்வேறு மொழியைச் சேர்ந்த திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுப் படக் குழுவினரைப் பாராட்டி வருகிறார்கள்.
இந்த ‘ஹோம்’ பார்த்துவிட்டு இயக்குநர் வசந்த பாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் இது குறித்து எழுதியிருப்பது இதுதான் :
“கதைக்காக எங்கெங்கோ தேடுகிறோம்… வீட்டுக்குள்ளேயே கதை இருக்கிறது என்பதை ‘ஹோம்’ திரைப்படம் உணர்த்துகிறது. இன்றைய வாழ்வின் அற்பங்கள் மூலமாக வாழ்வின் அதி உன்னதத்தை ஹோம் பேசுகிறது. ஒரு மாத கண்ணீரும் நேற்றிரவு என் தலையணையை நனைத்தது. கண்ணீர் வெளியேறியது ஒருவித விடுதலையாக இருந்தது. நன்றி #home.
மலையாள சினிமா ஓடிடியின் தன்மையை, தனித்துவத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு தொடர்ந்து நல்ல திரைப்படங்களை எழுதி வெளியிடுகிறது. தமிழ் சினிமா உண்மையாகவே மூச்சு திணறுகிறது. திரைக்கதை ஆசிரியர்களை உருவாக்கத் தவறியதின் துயரத்தை அனுபவிக்கிறோம்…” என்று வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.