சமுதாயத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டி காட்டும் கதை அம்சம் உள்ள படங்கள் என்றுமே இயக்குனர் ஜனநாதன் உடைய பெரும் பலமாகும். அவரது binary pictures மற்றும் யு டி வீ motion pictures இணைந்து வழங்கும் ‘புறம்போக்கு’ அத்தகைய ஒரு கதை அம்சம் கொண்ட படமாகும்.
ஆர்யா, விஜய் சேதுபதி, ஷ்யாம் மற்றும் கார்த்திகா நாயர் என்று பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படம் தற்போது துரித வேகத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. தன்னுடைய ‘புறம்போக்கு’ படத்தை பற்றி சில கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் இயக்குனர் ஜனநாதன்.
“சிறையில் உள்ள எல்லோருமே குற்றவாளிகள் அல்ல.. நமது சரித்திரத்தின் பெரும் அத்தியாயங்கள் சிறைச்சாலையில்தான் அரங்கேறியுள்ளன. மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற மாபெரும் தலைவர்கள் சிறைச்சாலையில் இருந்துதான் தங்களது வெற்றி சரித்திரத்தை துவக்கினர்.
இந்த ‘புறம்போக்கு’ படத்தில் சிறைச்சாலை ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இருக்கிறது. இந்தப் படத்தில் இடம் பெறும் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களும் நமது சரித்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டதுதான். சுதந்திர போராட்ட காலத்தில் மதுரையில் பிறந்து பின்னர் ஆந்திராவில் வாழ்ந்த வரலாற்று நாயகன் ‘பாலு’வின் பெயர்தான் ஆர்யாவுக்கு சூடப்பட்டு உள்ளது.
சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றிய தமிழகத்தின் புரட்சி வீராங்கனை ‘வேலு நாச்சியார்’ அவர்களின் பாசறையில் முக்கிய பங்கு வகித்து, பின்னர் ஆங்கிலேயர்களின் ஆயுத கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி அழித்த ‘குயிலின்’ பெயர் கார்த்திகாவுக்கும், ஆங்கிலேயர் காலத்தில் அவர்களது கல்வி முறையை அறிமுகப்படுத்தியவரும், ஆங்கிலேயர்களின் கடுமையான தண்டனை முறையை அறிமுகப்படுத்தியவருமான ‘மெக்காலே’வின் பெயர் ஷ்யாமுக்கும், மிகவும் வித்தியாசமான அதே சமயம் யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்துக்கு ‘யமலிங்கம்’ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கலை இயக்குனர் செல்வகுமாரின் கை வண்ணத்தில் உருவான பிரமாண்டமான சிறைச்சாலை அரங்கின், ஒவ்வொரு சதுரத்தையும் தனது நேர்த்தியான ஒளிப்பதிவின் மூலம் படமாக்கியுள்ளார் ஒளிபதிவாளர் ஏகாம்பரம். தொழில் நுட்பத் தேவைகளுக்கு சிறிதும் தயங்காமல், படத்தின் தரமே முக்கியம் என உறுதுணையாக இருந்த யு டி வி நிறுவனத்துக்கும் எனது நன்றிகள்” என்றார் இயக்குனர் ஜனநாதன்.