full screen background image

‘அன்பு செல்வன்’ பட விவகாரம் – கெளதம் மேனனின் அந்தர் பல்டி..!

‘அன்பு செல்வன்’ பட விவகாரம் – கெளதம் மேனனின் அந்தர் பல்டி..!

‘அன்பு செல்வன்’ பட விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்தப் படத்தில் நடித்ததை ஒத்துக் கொண்ட இயக்குநர் கெளதம் மேனன், படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டதால் தான் அந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

கெளதம் மேனன் நாயகனாக நடிக்கும் ‘அன்பு செல்வன்’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த நவம்பர் 3-ம் தேதி வெளியிடப்பட்டது. இதனை இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இதைப் பார்த்த இயக்குநரும், நடிகருமான கெளதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கே தெரியாமல் நான் நாயகனாக நடித்துள்ள படமா..?” என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். இவருடைய இந்த ட்வீட்டும் இணையத்தில் வைரலாகப் பரவியது.

இதையடுத்து பா.ரஞ்சித் தனது சார்பான விளக்கத்தை வெளியிட்டார். இதற்குப் பிறந்த இந்தப் படக் குழுவினர் கெளதம் மேனன் தங்களுடைய படத்தில் நடித்த காட்சிகளை வீடியோ தொகுப்பாக வெளியிட்டனர்.

அதில் “இதனைப் போலி என்று இனியும் யாரும் மறுக்க முடியாது. தெளிவுபடுத்தத் தயாராக உள்ளோம். ‘அன்பு செல்வன்’ படத்தின் டைட்டில் மாற்றப்பட்டதே இந்தக் குழப்பத்துக்குக் காரணம்” என்று தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து கெளதம் மேனன் தனது டிவீட்டர் பக்கத்தில் “ஒரே ஒரு அன்பு செல்வன்தான். அது சூர்யா மட்டுமே” என்று தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக தொடர்பாக கெளதம் மேனன், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “நான் 2018-ம் ஆண்டில் அறிமுக இயக்குநர் ஜெய்கணேஷின் இயக்கத்தில் ‘வினா’ என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். சில நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டேன். அதற்குப் பிறகு படத்தின் பணிகள் எதுவுமே நடைபெறவில்லை.

தற்போது தயாரிப்பாளர் மகேஷ், வேறொரு இயக்குநரான வினோத் குமார் என்பவருடன் என்னை வந்து சந்தித்து, “இந்தப் படத்தை மீண்டும் தொடங்கலாம்…” என்று கேட்டார். அதற்கு “ஜெய்கணேஷ் இயக்கத்தில் மட்டுமே நான் நடிப்பேன்…” என்று தெரிவித்துவிட்டேன்.

ஆனால் இப்போது அதே ‘வினா’ என்ற படத்தை ‘அன்பு செல்வன்’ என்று பெயர் மாற்றி அவர்கள் போஸ்டர்களாக வெளியிட்டுள்ளனர். என் அனுமதி பெறாமல் இது நடைபெற்றுள்ளது. இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விளம்பரங்களை நிறுத்துமாறு அந்தத் தயாரிப்பாளருக்கு அறிவுறுத்த வேண்டும்..” என்று கெளதம் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

Our Score