full screen background image

“எல்லா நடிகர்களுக்கும் ஒரே படத்தில் எம்.ஜி.ஆர்.-ஆக ஆசை..” – ‘தில் ராஜா’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு!

“எல்லா நடிகர்களுக்கும் ஒரே படத்தில் எம்.ஜி.ஆர்.-ஆக ஆசை..” – ‘தில் ராஜா’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு!

GOLDEN EAGLE STUDIOS சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தில் ராஜா.

இந்தப் படத்தில் விஜய் சத்யா  கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன்  விஜய் சத்யா சிக்ஸ் பேக்  உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர்,  வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். பாடல்களை  நெல்லை ஜெயந்தன், கலைகுமார் இருவரும் எழுதியுள்ளனர். ஒளிப்பதி – மனோ V.நாராயணா, கலை – ஆண்டனி பீட்டர், நடனம் – செந்தாமரை, படத்தொகுப்பு – சுரேஷ் அர்ஷ், ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன், தயாரிப்பு மேற்பார்வை – நிர்மல், தயாரிப்பு நிர்வாகம் – பூமதி – அருண், பத்திரிக்கை தொடர்பு – புவன் செல்வராஜ், தயாரிப்பு  – கோவை பாலசுப்ரமணியம்.

‘சாக்லேட்’, ‘பகவதி’, ‘ஏய்’, ‘வாத்தியார்’, ‘மாஞ்சா வேலு’, ‘மலை மலை’, ‘கில்லாடி’ போன்ற வெற்றிப்  படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த “தில் ராஜா” திரைப்படம் வரும் 27-ம் தேதி திரைக்கு வரவுள்ளதால், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக் குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசும்போது, “அனைவரையும் இங்கு ஒன்றாகப் பார்ப்பது மிகப் பெரிய சந்தோசம் தருகிறது. இந்த தில் ராஜா படத்தில் நான் நடித்த பாடல் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இனி நடிப்பேனா எனத் தெரியவில்லை. படம் முடித்த பின்னர் புரமோசனுக்கு மாஸாக ஒரு பாடல் கேட்டார்கள். ஹுயூமரா காமெடியாக நடிக்க ஆள் வேண்டும் என்று சொன்னார்கள். ஆள் தேடித் தேடி கடைசியில் என்னையே நடிக்க வைத்து விட்டார்கள்.

ஏ.வெங்கடேஷ் சார் படத்தில் இசையமைக்க எவ்வளவோ ஆசைப்பட்டிருக்கிறேன். விஜய் சாரின் ஃபேன் நான், அவரையும் அம்மாவையும் வைத்து படம் எடுத்திருக்கிறார். அவருடன் படம் கிடைத்தது மகிழ்ச்சி. விஜய் சத்யா ஒரு நடிகனாக மக்களை மகிழ்விக்கக் கடுமையாக உழைக்கிறார். அவர் பல வலிகளுடன்தான் இங்கு இருக்கிறார். அவருக்கு இந்தப் படம் வெற்றியைத் தரட்டும். இனிமேல் நான் கண்டிப்பாக நடிக்க மாட்டேன். இந்தப் படம் நல்ல இடத்தைச் சென்றடைய வேண்டும். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி..” என்றார்.

நடிகை கனிகா மான் பேசும்போது, “எல்லோருக்கும் வணக்கம், இங்கு இந்த மேடையில் இருப்பது மகிழ்ச்சி. விஜய் சத்யாவுடன் அடுத்த படத்தில் நடிக்கிறேன். இந்தப் படம் பார்த்தேன். மிக அருமையாக வந்துள்ளது. படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். எல்லோருக்கும் நன்றி…” என்றார்.

தயாரிப்பாளர் திருமலை பேசும்போது, “இது சினிமாவிற்கு ஏற்ற ஒரு டைட்டில். இந்தப் படத்தின் ஹீரோ விஜய் சத்யா பார்க்க, ஹாலிவுட் ஹீரோ போல் இருக்கிறார். வெங்கடேஷ் சார் பல வெற்றிப் படங்களை உருவாக்கியவர். விஜய் சத்யாவிற்கு அருமையான படம் தந்துள்ளார். ஷெரீன் மிக அழகாக நடித்துள்ளார்.

இந்த 27-ம் தேதி எத்தனை படங்கள் வருகிறது என உங்களுக்குத் தெரியும். கார்த்தி சார் படத்துக்கு இணையாக இந்த போஸ்டர் இருக்கிறது.

அம்ரீஷ் நல்ல பாடல்களைத் தந்துள்ளார். அவர் நடித்தால் இன்னும் நன்றாக இருப்பார். ஒரு நடிகனாக மட்டுமில்லாமல் இந்தப் படத்தைத் தயாரிப்பாளனாக இன்றுவரை சுமந்து கொண்டிருக்கிறார் விஜய் சத்யா. இப்படி ஒரு ஹீரோ இருப்பது தமிழ் சினிமாவுக்கு பெருமை.

இப்போது தமிழ்ச் சினிமாவில் ஒவ்வொரு படத்தையும் திரைக்குக் கொண்டு வருவதில் மாபெரும் போராட்டம் நடந்து வருகிறது. தமிழ் சினிமா இப்போது மிக மோசமான நிலையில் இருக்கிறது. மகாராஜா எவ்வளவு பெரிய ஹிட் எனத் தெரியும் ஆனால், அந்தப் படத்தின் புரடியூசரே தூக்கமில்லாமல் இருக்கிறார் அவருக்கு லாபமில்லை.

இந்தப் படத்தில் நடித்த இரண்டு நாயகிகளும் இங்கே வரவில்லை. ஹீரோயின் ஷெரீன் இந்த விழாவுக்கு வந்திருக்க வேண்டும். வராமல் இருப்பது கேவலம். பணம் வாங்கித்தானே நடிக்கிறீர்கள். நீங்கள் ஏன் நடிக்க வருகிறீர்கள்? இப்போது தயாரிப்பாளர் சங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இனிமேல் இது நடக்காமல் இருக்கத் தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்கும். இப்படக் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள் நன்றி..” என்றார்.

நடிகை வனிதா பேசும்போது, “விஜய் சத்யாவிற்கும், ஏ வெங்கடேஷ் சாருக்கும், அம்ரீஷுக்கும் என் வாழ்த்துக்கள். அம்ரீஷை அதிகம் வெளியில் பார்த்ததில்லை, இப்போதுதான் பார்க்கிறேன். எல்லாப் பாடல்களும் நன்றாக வந்துள்ளது வாழ்த்துக்கள்.

10 வருடம் முன் எங்கப்பா உடன் சண்டையெல்லாம் நடந்தபோது, மீண்டும் சினிமாவில் நடிக்க நான் நினைத்தபோது, ஏ.வெங்கடேஷ் சார்தான் என்னை நடிக்க வைத்தார். இந்தப் படத்தில் நடிக்க என்னைத் தேடியபோது, நான் சம்பளம் அதிகம் கேட்பதாக சொல்லியிருக்கிறார்கள், ஏ. வெங்கடேஷ் சார் கேட்டபோது, “சார் என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும். நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம், என்றைக்கு என்று சொல்லுங்கள். நான் வருகிறேன்..” என்று சொல்லிவிட்டுப் போய் நடித்தேன்.

இப்போது நானும் இயக்குநராக மாறியிருக்கிறேன். பி.வாசு ஸாரிடம் 4 திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். படம் செய்வதில் உள்ள கஷ்டம் எனக்கும் தெரியும். விஜய் சத்யா இந்தப் படத்தை கஷ்டப்பட்டு எடுத்து, இங்கு கொண்டு வந்துள்ளார். செப்டம்பர் 27-ம் தேதி இப்படம் வருகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..” என்றார்.

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பேசும்போது, “இங்கே வந்திருக்கும் எல்லோருக்கும் நன்றி, இப்படத்தில் ஷெரீன், சம்யுக்தா இருவரும் நடித்தார்கள், ஆனால் பட விழாவிற்கு அழைத்தோம், வரவில்லை, சாமர்த்தியமாக மறுத்தார்கள். என்னைக்கூட “உங்கள் பட ஹீரோக்களை கூப்பிடுங்கள்” என்றார்கள், நானும் ஒரு ஹீரோவை கூப்பிட்டேன். அவர் வரவில்லை. இதுதான் சினிமா.

விஜய் சத்யா ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு, இந்தக் கதையை சொன்னார். என் கருத்துக்களை சொன்னேன். “சார் நீங்கதான் டைரக்ட் பண்ணனும்” என்றார். “கதை என் ஸ்டைலில் இல்லையே” எனத் தயங்கினேன். ஆனால், “நீங்கள்தான் பரபரவென டைரக்ட் செய்வீர்கள்” என்றார். மகிழ்ச்சியுடன் ஒகே சொன்னேன்.

எந்தப் பிரச்சனை வந்தாலும், அதை எதிர் கொள்ளும் ஹீரோதான் இந்தப் படத்தின் ஒன் லைன். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். ஷெரீனுக்கு முக்கியமான ரோல், சம்யுக்தாவிற்கும் முக்கியமான ரோல், இருவரும் வரவில்லை. வனிதா இந்தப் படத்தில் இருப்பது ஆடியன்ஸுக்கு தெரியக்கூடாதென நினைத்தேன். இன்று வேறு வழியில்லாமல் வரவைத்து விட்டேன். அவர் கதாப்பாத்திரம் எல்லோருக்கும் பிடிக்கும்.

அம்ரீஷ் உடன் நிறையச் சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் பொறுமையாக மிக அழகாகப் பாடல்கள் தந்துள்ளார். விஜய் சத்யா அத்தனை கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு நடித்திருக்கிறார். சத்யாவின் திறமைக்கு மிகப் பெரிய பெயர் கிடைக்க வேண்டும் என வேண்டுகிறேன். எல்லோரும் ஆதரவு தாருங்கள். நன்றி…” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். அம்ரீஷ் என் பிள்ளைகளில் ஒருவன். இன்னும் அவன் பெரிய ஆளாக வருவான். நாயகிகள் ரெண்டு பேரும் வரவில்லை என்கிறார்கள். எப்போதோ பேக்கப் பண்ணிய ஹீரோயினை ஏன் படத்தில் நடிக்க வைத்தீர்கள். இனிமேல் அந்த இரண்டு பேருக்கும் தமிழில் யாரும் வாய்ப்பு தரக் கூடாது. இதோ அடுத்த படத்தில் நடிக்கும் நடிகை வந்திருக்கிறார் அவருக்கு என் வாழ்த்துக்கள்.

என் நண்பன் திருமலை மனக் கஷ்டத்தில் எல்லாவற்றையும் கொட்டிவிட்டார். தயாரிப்பாளருக்கு நன்றி மறந்தவனை நடிக்க வைக்காதீர்கள். இந்தப் படத்தில் அம்ரீஷ் அருமையான பாடல்கள் தந்துள்ளார். இயக்குநர் ஏ.வெங்கடேஷ் 32 நாட்களில் இந்தப் படத்தை எடுத்து முடித்துள்ளார். பட டிரெய்லரே மிக அருமையாக உள்ளது. இந்த தில் ராஜா வெல்லும் ராஜாவாக இருக்கும்.

விஜய் சத்யா ஒரு ஆணழகன். தமிழ் மகன். நல்ல நடிகனாக வெற்றி பெற வாழ்த்துக்கள். இப்போது வரும் நடிகர்களுக்கு வரும்போதே எம்.ஜி.ஆர். ஆகிவிட வேண்டுமென ஆசை. ஆனால் அவர் பட்ட கஷ்டம் யாருக்கும் தெரியாது. சாப்பாட்டுக்காகக் கஷ்டப்பட்டவர். அவர், அதிலிருந்து உழைத்து வந்தவர். அவர் அருமை யாருக்கும் வராது. சத்யா நன்றாக உழைத்து, இன்னும் நல்ல படங்கள் செய், நல்ல நடிகனாக என் வாழ்த்துக்கள்..” என்றார்.

நடிகர் விஜய் சத்யா பேசும்போது, “எல்லோரும் எங்களை மதித்து என் விழாவிற்கு வந்துள்ளீர்கள். நன்றி. இயக்குநர் வெங்கடேஷ் சார் சூப்பராக இந்தப் படத்தை இயக்கியுள்ளார். எல்லோரும் ரசித்து ரசித்து வேலை செய்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். உங்கள் ஆதரவைத் தந்து வெற்றி பெறச்செய்யுமாறு, அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.” என்றார்.

Our Score