full screen background image

‘உள்ளத்தை அள்ளித் தா’ மேஜிக்கை மீண்டும் நிகழ்த்த வரும் சுந்தர்.சி.-யின் ‘காபி வித் காதல்’..!

‘உள்ளத்தை அள்ளித் தா’ மேஜிக்கை மீண்டும் நிகழ்த்த வரும் சுந்தர்.சி.-யின் ‘காபி வித் காதல்’..!

காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்து கொண்டு எப்போதும் முன்னணி இயக்குநர்கள் வரிசையிலேயே தன்னை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் இயக்குநர் சுந்தர்.சி.

கவலைகளை மறந்து குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்தபடி கலகலப்பான படம் பார்க்க வேண்டும் என்றால் அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பதும் இயக்குநர் சுந்தர்.சியின் படங்கள்தான்.

முழு நீள காமெடி படங்கள் என்றாலும் சரி, ஹாரர் படங்கள் என்றாலும் சரி, இவருடைய அனைத்து படங்களும் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் தியேட்டருக்கு அழைத்து வரக் கூடிய பொழுது போக்கு அம்சங்களுடன்தான் அமைந்திருக்கும்..

அந்த வகையில் கடைசியாக வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற ‘அரண்மனை-3’ படத்திற்கு பிறகு, தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காபி வித் காதல்’.

நடிகை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று கதாநாயகர்கள் நடிக்க, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.

தயாரிப்பு – அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட், மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் குஷ்பு சுந்தர்.C , A.C.S.அருண் குமார், இசை – யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு – E.கிருஷ்ணசாமி, படத் தொகுப்பு – ஃபென்னி ஆலிவர், கலை இயக்கம் -குருராஜ்.B, நடன  இயக்கம் – ராஜு சுந்தரம், ராபர்ட், சாண்டி, தீனா, சண்டை பயிற்சி இயக்கம் – தளபதி தினேஷ், நிர்வாக தயாரிப்பு – பாலா கோபி, பத்திரிகை தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத்.

ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று சகோதரர்கள். அவர்களுக்குள் ஒத்துப் போகாத வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறார்கள் . இசையமைப்பாளராக ஒருவன், ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவன், சமையல் வேலையில் ஆர்வம் உடைய ஒருவன்… அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்த படத்தில் சுந்தர்.சி. தனது பாணியில் கலகலப்புடன்  கூறி இருக்கிறார்.

பல வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற உள்ளத்தை அள்ளித் தா’ திரைப்படம், ஊட்டியை கதைக் களமாக கொண்டு எடுக்கப்பட்டு மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது இந்த படமும் சென்னையில் துவங்கி ஊட்டியில் நடப்பது போலவே காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 75 நாட்கள் நடைபெற்றுள்ளது.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஜூலை மாதம் இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Our Score