திரையரங்குகள், மால்களில் உணவுப் பொருட்களுக்கு பல மடங்கு விலை வைத்து விற்பதைத் தடுக்கும்வகையில் சட்டமுறை எடையளவு(பொட்டலப் பொருட்கள்) விதிகள் 110-ல் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது.
இதன் மூலம் ஒரு உணவுப் பண்டத்திற்கு திரையரங்கத்திற்கு உள்ளே ஒரு விலையும், வெளியே ஒரு விலையும் இல்லாமல் ஒரே விலையிலேயே உணவுப் பொருட்கள் மக்களுக்கு விற்கப்படும்.
தமிழகத்தின் முக்கிய மாநகரங்களில் மால்கள், திரையரங்குகள் மக்கள் பொழுது போக்கும் இடங்களாக உள்ளன. இந்த மால்களில் வெளியில் இருந்து உணவுப் பொருட்கள், தண்ணீர் போன்றவைகளை கொண்டு செல்ல்லாம். ஆனால் திரையரங்குகளுக்குள் உணவுப் பொருட்களை கொண்டு செல்ல முடியாது.
இதனால் வேறு வழியில்லாமல் அங்கு வைத்திருக்கும் பொருட்களைத்தான் வாங்க வேண்டியிருக்கும். ஆனால் அந்த உணவுப் பொருட்களின் விலை தியேட்டருக்கு எதிரில் இருக்கும் கடையில் விற்பதைவிடவும் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பயனாளர்களின் பணம் வீணாகிறது.
உதாரணமாக திரையரங்குகளில் ஒரு குடிநீர் பாட்டின் விலை 50 ரூபாய். ஆனால் அதே குடிநீர் பாட்டிலின் விலை வெளியில் வெறும் 20 ரூபாய்தான். இதனைச் சுட்டிக் காட்டி கேள்வியெழுப்பினால் அதிகப்பட்ச சில்லரை விற்பனை விலையாக 50 ரூபாய் என்று அந்த பாட்டிலில் குறிப்பிடப்பட்டிருப்பதை காட்டுகிறார்கள்.
இதுபோல் ஒரே பொருளுக்கு இரு வேறு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இருந்தாலும், இப்படி ஏமாற்றி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட விதிகள் இல்லாத்தால் அரசுகள் எதுவும் செய்ய முடியாத நிலைமை இருந்த்து. எனவே இதற்காக சட்டமுறை எடையளவு விதிமுறைகளில் திருத்தம் செய்யும்படி மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வந்து கொண்டேயிருக்கின்றன.
இந்தக் கோரிக்கைகள் நாடு முழுவதிலும் இருந்து வந்த்தையடுத்து சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள் 110-ல் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இத்திருத்தம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும்.
ஏன் இத்தனை மாத இடைவெளியென்றால் அதற்குள்ளாக உற்பத்தியாளரும், விற்பனையாளரும், நுகர்வோரும் தங்களை தயார்படுத்திக் கொள்ளவே இந்த கால அவகாசம் என்கிறது மத்திய அரசு.
ஏற்கெனவே அனைத்து திரையரங்குகளிலும் தண்ணீர் இலவசமாக தரப்பட வேண்டும் என்கிற தேசிய நுகர்வோர் ஆணையத்தின் உத்தரவையே பெரும்பாலான தியேட்டர்கள் இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.









