‘வாலு’ படம் அடுத்த மாதம் ரிலீஸ். ‘இது நம்ம ஆளு’ ஆகஸ்ட்டில் ரிலீஸ் உறுதி என்று சொல்லப்பட்டாலும் கோடம்பாக்கத்தில் யாருமே இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போதைய நிலைமையில் ‘வரும் ஆனால் வராது’ கதைதான் சிம்புவின் படங்களின் கதி.
இந்த நேரத்தில் இதனை உறுதிப்படுத்தும்வகையில் ‘இது நம்ம ஆளு’ படத்திற்கெதிராக நீதிமன்றத்தில் தடையாணை கோரப்பட்டுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜின் ‘பசங்க புரொடெக்சன்ஸ்’ மற்றும் ‘சிம்பு சினி ஆர்ட்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்த படம் ‘இது நம்ம ஆளு’. இதில் சிம்புவுடன் நயன்தாரா மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஜோடி போட்டிருக்கிறார். மேலும் சூரி, ஆண்ட்ரியா, ஜெயபிரகாஷ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைத்திருக்கிறார். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்ய கே.எல்.பிரவீன் எடிட்டிங் செய்திருக்கிறார்.
இயக்குநர் பாண்டிராஜ் சிம்புவின் தாமதமான கால்ஷீட் சொதப்பல் காரணமாக படத்தை முடிக்காமலேயே அடுத்தடுத்த படங்களுக்குத் தாவி ஓடிவிட.. படம் மொத்தத்தையும் தானே சுமந்து கொண்டு தனியாளாக, தயாரிப்பளராக தனது மகனுக்காக களத்தில் குதித்தார் டி.ஆர். படத்தின் ரிலீஸ் தேதியாக இப்போதைக்கு ஆகஸ்ட் 19-ம் தேதியை தேர்வு செய்திருக்கிறார்கள்.
இந்த நேரத்தில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தப் படத்திற்கு தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. டேக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரான சிவராஜ், இந்தப் படத்திற்கெதிராக மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “நடிகர் சிம்பு, நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ என்ற சினிமாவை இயக்குநர் டி.ராஜேந்தர் தயாரித்துள்ளார். தயாரிப்புக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதால் எங்களிடம் 2 கோடியே 50 லட்சம் ரூபாயை கடனாக வாங்கினார்.
படத்தை திரையிடும்போது பணத்தை திரும்பத் தருவதாக கூறியிருந்தார்.
ஆனால் இதுவரை அந்தப் படத்தை திரையிடுவது பற்றி அவர் கூறவில்லை. இந்த நிலையில் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் 7 காசோலைகளைக் கொடுத்தார். ஆனால் தன்னிடம் சொல்லிவிட்டுத்தான் காசோலையை வங்கியில் செலுத்த வேண்டும் என்றும் கூறிவிட்டார்.
எனவே படத்தை வெளியிடுவது பற்றி நாங்கள் நோட்டீசு அனுப்பினோம். அவர் அதற்கு பதிலளிக்கவில்லை. தற்போதைய நிலவரப்படி வட்டியுடன் சேர்த்து 2 கோடியே 67 லட்சம் ரூபாயை டி.ராஜேந்தர் திருப்பித் தர வேண்டும். எனவே எங்களுக்கு பணத்தைத் திருப்பித் தராமல் இது நம்ம ஆளு படத்தை வெளியிடக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்..” என்று கேட்டுள்ளார்.
இந்த மனு நேற்று நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி டி.ராஜேந்தருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.