வித்தியாசமான கதைக் களங்களைக் கொண்ட படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கணம்’.
இந்தப் படத்தில் சர்வானந்த், அமலா அக்கினேனி, நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளராக சுஜித் சராங், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், படத் தொகுப்பாளராக ஸ்ரீஜித் சராங், கலை இயக்குநராக சதீஷ்குமார் உள்ளிட்ட சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தில் பணி புரிந்துள்ளனர். அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’ என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
தெலுங்கில் சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோருக்கு பதிலாக ‘வெண்ணிலா’ கிஷோர் மற்று ப்ரியதர்ஷி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒவ்வொரு படத்திலுமே படத்தின் கதையோட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் சில பாடல்கள் அமையும். அந்தப் பாடலைக் கேட்டாலே படத்தின் கதைக் களத்தை நம்மால் உணர்த்து கொள்ள இயலும். அப்படி இந்தக் ‘கணம்’ படத்திலும் ‘அம்மா’ பாடல் ஒன்று அமைந்துள்ளது.
இந்த ‘அம்மா’ பாடலை கவிஞர் உமா தேவி எழுதியிருக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் தனது இசையின் மூலம் உயிரூட்டி இருக்கிறார். சித் ஸ்ரீராம் தனது குரல் மூலம் கேட்பவர்களை மயக்கியுள்ளார்.

இந்தப் பாடல் உருவானவிதம் குறித்து இயக்குநர் ஸ்ரீகார்த்திக் கூறுகையில், “இந்த அம்மா பாடல்தான் ‘கணம்’ படத்தின் ஆன்மா. இது கதையை மேம்படுத்தும் பாடல் மட்டுமல்ல, இந்தப் பாடல்தான் இந்தப் படமே. ஒரு வகையில் இந்தப் படத்தின் முதுகெலும்பு இதுதான் என்று சொல்வேன்.
3 வருடங்களுக்கு முன்பே, இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னபேயே இந்தப் பாடலை உருவாக்கினோம். இந்தப் பாடலை முடித்தவுடனேயே இது கதையின் தன்மையை இன்னும் சிறப்பானதாக ஆக்குவதை உணர்ந்தோம்.
இந்தப் பாடலை கேட்ட பிறகுதான், அடுத்து வரப்போகும் நாட்களில் எந்தப் பார்வையோடு இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்பதை மொத்தக் குழுவும் அறிந்து கொண்டது. படப்பிடிப்பின்போது எல்லோரும் ஒரே நேர்கோட்டில் சிந்திக்க இந்த அம்மா பாடல்தான் உதவியது.
தெலுங்கில், மறைந்த பாடலாசிரியர் சிரிவெண்ணெலா அவர்கள் எழுதிய கடைசி பாடல்களில் ஒன்று இது. முதலில் நாங்கள் தெலுங்கு மொழியில் பாடலைத் தயார் செய்திருந்தாலும் அதை தமிழுக்கு அப்படியே மாற்றவில்லை.
பாடலின் அதே கருவை வைத்துத் தமிழில் மொத்தமாக புதிய வரிகளை உருவாக்கி இருக்கிறோம். ‘மன்னன்’ படத்தின் ‘அம்மா என்றழைக்காத…’,
‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் இடம் பெற்ற ‘அம்மா.. அம்மா..’ போன்ற சில பாடல்களுக்குப் பிறகு இந்த ‘அம்மா..’ பாடல் அனைத்து வயதினரையும் கொண்டாட வைக்கும். தனது அம்மாவை இழந்தவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு தாலாட்டாக இருக்கும். மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கை தரும் பாடலாகவும் இது இருக்கும்” என்று தெரிவித்தார்.
தற்போது வெளியாகியுள்ள இந்த ‘அம்மா’ பாடலை கேட்டுவிட்டு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். கூடவே, ‘கணம்’ படக் குழுவினருக்கும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
இரு மொழிகளில் உருவாகி வரும் இந்தக் ‘கணம்’ – ‘ஒகே ஒக ஜீவிதம்’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.