full screen background image

அனுமதியில்லாமல் படத்தை வெளியிட்டதற்காக கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை மீது வழக்கு

அனுமதியில்லாமல் படத்தை வெளியிட்டதற்காக கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை மீது வழக்கு

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரான சுனில் தர்ஷன்,  ‘ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா’ என்ற படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி உள்ளார். இதில் சிவ தர்ஷன், நடாஷா பெர்னாண்டஸ் மற்றும் உபென் படேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இன்னும் திரைக்கு வராத நிலையில் அத்திரைப்படம் யூ டியூப்பில் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக யூ டியூப் நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் அது நீக்ககப்படவில்லை என்று அவர் புகார் தெரிவித்துள்ளார்.  

“அத்திரைப்படத்தை எனது கட்சிக்காரர் யாருக்கும் விற்கவில்லை. இணையத்தில் வெளியிடவும் இல்லை, இருப்பினும், அது லட்சக்கணக்கான பார்வைகளுடன் யூ டியூப்பில் வலம் வருகிறது. யூ டியூப் நிர்வாகம் விளம்பரங்கள் மற்ற ஆதாரங்கள் வழியே இத்திரைப்படத்தின் மூலம் பெரும் வருவாயை ஈட்டியுள்ளது..” என்று சுனீல் தர்ஷனின் வழக்கறிஞர் ஆதித்யா தெரிவித்துள்ளார். 

காப்புரிமை சட்டத்தை மீறி யூ டியூப்பில் இத்திரைப்படம் பதிவேற்றப்பட்டது தொடர்பாக சுனில் தர்ஷன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கூகுள் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்ய மும்பை காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து கூகுள் முதன்மை செயல் அதிகாரி  சுந்தர் பிச்சை, யூ டியூப் நிறுவனத்தின் சி.இ.ஓ. கெளதம் ஆனந்த் மற்றும் 3 ஊழியர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் மீது மும்பை போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். 

Our Score