பிரபு தேவா ஸ்டுடியோஸ் மூலம் பிரபு தேவா தயாரிக்கும் மூன்று படங்களில் ஒன்றான ‘வினோதன்’ படத்தில் மறைந்த பிரபல நடிகர் ஐசரி வேலனின் பேரன் வருண் ஹீரோவாக நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக நடிக்க ஒரு ஹீரோயினை பல நாட்களாக இயக்குநர் விக்டர் ஜெயராஜ் தேடிக் கொண்டிருந்தார். கடைசியாக நடிகை வேதிகா அந்தக் கேரக்டருக்கு தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர்.
இது பற்றி நடிகை வேதிகா பேசும்போது, “இயக்குநர் விக்டர் என்னிடம் கதை சொல்ல வரும்போது, பிரபு தேவா சாருடைய நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் என்றவுடன் மிகவும் உற்சாகமானேன்.
கதையை கேட்டவுடன் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி, அவ்வளவு நேர்த்தியான, செதுக்கப்பட்ட கதை. ‘பரதேசி’ ‘காவிய தலைவன்’ ஆகிய படங்களில் இருந்த எனது கதாப்பாத்திரத்தை போலவே வித்தியாசமான, மிகவும் சவாலான கதாபாத்திரம்தான் இந்தப் படத்திலும் எனக்குக் கிடைத்திருக்கிறது.
‘வினோதன்’ மனோதத்துவத்தின் பின்னணியில் உருவாகும் ஒரு த்ரில்லர் கதை. இயக்குநர் என்னுடைய கதாபாத்திரம் எப்படி நடிக்க வேண்டும் என்பது குறித்து ஒரு ஆய்வே செய்து வைத்திருக்கிறார். அதன் அடிப்படையில் எனக்கும், கதாநாயகன் வருனுக்கும் ஒரு நடிப்பு பயிற்சி வகுப்பு எடுக்கவுள்ளார். இந்த வகுப்பு வளர்ந்து வரும் என்னை போன்ற நடிக-நடிகையருக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்.
‘வினோதன்’ மூலம் என்னுடைய நெடுநாள் கனவு ஒன்று நிறைவேறவுள்ளது. நான் சிறு வயதில் இருந்தே பிரபு தேவா சாருடைய தீவிர விசிறி. இப்பொழுது ஒரு நடிகையாக அவருடைய தயாரிப்பில் நடிக்கப் போவதை எண்ணி மிகவும் சந்தோஷப்படுகிறேன். அவருடைய இயக்கத்திலும், அவருக்கு இணையாகவும் நடிக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம். ‘வினோதன்’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது…” என்று தன வசீகர புன்னகையை வீசியவாறு கூறினார் வேதிகா.