நடிகை ‘காதல்’ சந்தியாவின் திருமணம், அவரது சொந்த ஊரான கேரளாவில் நேற்று எளிமையாக நடந்திருக்கிறது.
பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் ஹீரோரியினாக அறிமுகமானவர் சந்தியா. அந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பின்பு ‘டிஸ்யூம்’, ‘வல்லவன்’, ‘கூடல் நகர்’ என்று 40-க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்திருக்கிறார் சந்தியா. கடைசியாக ‘துணை முதல்வர்’ படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சந்தியா.
கேரளாவைச் சேர்ந்த நடிகை சந்தியா சென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கும், சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஐ.டி. என்ஜினீயர் வெங்கட் சந்திரசேகரன் என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இவர்களது திருமணம் நேற்று சென்னையில் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் சந்தியா தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பையும் சூழ்ந்தது. இதனால் அவர்கள் வெளியேற வர முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக இருப்பதால் திருமணத்தை சென்னைக்கு பதில் கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் நடத்தலாம் என சந்தியாவின் பெற்றோரும், மணமகனின் பெற்றோரும் பேசி முடிவு எடுத்தனர்.
அதனை உறவினர்களுக்கு தெரியப்படுத்த சந்தியா குடும்பத்தினர் முயற்சி செய்தனர். ஆனால் மழையால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் யாருக்கும் தகவல் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மழை ஓய்ந்து நிலைமை சீரடைந்ததும் சந்தியா குடும்பத்தினரும், மணமகன் வெங்கட் சந்திரசேகரன் குடும்பத்தினரும் காரில் குருவாயூர் புறப்பட்டனர்.
சென்னையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர்களது கார் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை தள்ளி வந்து கரை சேர்த்தனர்.
அதன் பிறகு அவர்கள் ஒரு தனியார் பஸ்சை வாடகைக்கு பிடித்து குருவாயூர் சென்றனர். நேற்று காலை குருவாயூர் கோவிலில் சந்தியா- வெங்கட்சந்திரசேகரன் திருமணம் எளிய முறையில் நடந்தது. இதில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
திருமணம் குறித்து சந்தியாவின் பெற்றோர் அஜித்குமார் – மாயா பேசியபோது, “இப்போது பெய்து வரும் கன மழையால்தான் சந்தியா திருமணத்தை சென்னையில் நடத்த முடியவில்லை. இதனால் குருவாயூர் கோவிலில் திருமணம் நடத்தினோம். நாங்கள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதாகத்தான் முன்பு திட்டமிட்டு இருந்தோம்.
ஆனால், தற்போதைய மழை, வெள்ளம் காரணமாக எளிய முறையில் திருமணத்தை நடத்தி உள்ளோம். திருமண செலவுக்காக திட்டமிட்டு இருந்த தொகையை சென்னையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண உதவிக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். மழை குறைந்து இயல்பு நிலைக்கு வந்த பின்பு வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்துவோம்..” என்றனர்.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘காதல்’ படத்திற்காக சந்தியாவிற்கு தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.