பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில், தனது காந்த கண்களாலும் எதார்த்தமான நடிப்பாலும் தமிழ் ரசிகர்களின் மனதை வென்ற ஜனனி, தற்போது ‘உல்டா’ மற்றும் ‘தொல்லைக்காட்சி’ திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தனது தற்போதைய திரையுலக வாழ்க்கையைப் பற்றிப் பேசிய நடிகை ஜனனி, “A.R.முருகதாசின் உதவியாளரான விஜய் பாலாஜி இயக்கும் படம் ‘உல்டா’. சைக்கலாஜிக்கல் திரில்லரான இந்த படத்தின் டப்பிங் முடிவடைந்துவிட்டது. அதேபோல் A.R.முருகதாஸ் மற்றும் லிங்குசாமியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சாதிக்கான் இயக்கும் படமான ‘தொல்லைக்காட்சி’யின் முதற்கட்ட படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் என் கதாப்பாத்திரத்தின் பெயர் ‘மலர்’. முதல் முறையாக பாரம்பரியமிக்க தமிழ் பெண் வேடத்தில் நடிக்கிறேன். ‘பிரேமம்’ படத்தில் வந்த மலர் டீச்சர், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார். அதுபோல இந்த படத்தில் என்னுடைய ‘மலர்’ கதாப்பாத்திரமும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவரும்!” என்று சிறு புன்னகையுடன் சொல்கிறார்.
அதே நேரம், கதைகளை தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறாராம் ஜனனி. “படத்திற்கு ஆலமர விழுது போல் பக்கபலமாக இருப்பது படத்தின் கதைதான். அதனால் கதையம்சங்களை வைத்துதான் நான் படத்தை தேர்வு செய்கிறேன்…” என்கிறார்.









