‘புலிக்கு பிறந்தது பூனை ஆகாது’ என்ற பழமொழி சண்டை பயிற்சி இயக்குநர் சூப்பர் சுப்புராயனையும், அவர் மகன் திலீப் சுப்புராயனையும் பற்றியதாகத்தான் இருக்கவேண்டும்.
அந்த அளவுக்கு திலீப் மாஸ்டர் என்று அன்பாக அழைக்கப்படும் திலீப் சுப்புராயன் தனித்துவம் பெற்று வருகிறார். ‘தனி ஒருவன்’, ‘வாலு’, ‘புலி’, ‘விசாரணை’ போன்ற படங்களின் தத்ரூபமான சண்டை காட்சிகளால் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த திலிப் சுப்பராயன், ‘சங்குச் சக்கரம்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிப்பதால் அந்தப் படம் சண்டை படமாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உண்மையில் இந்தப் படம் அதற்கு நேர் எதிரானதாம்.
நடிகை கீதா, ‘பசங்க 2’ புகழ் நிஷேஷ் மற்றும் எட்டு சிறார்களுடன் கிண்டல், கேலி, நக்கல், நையாண்டி ஆகிய அம்சங்களுடன் உருவாகி வருகிறது இந்த ‘சங்குச் சக்கரம்’. ‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ போன்ற ஹிட் காமெடி படங்களை கொடுத்த லியோ விஷன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் வி.எஸ்.ராஜ்குமாரும், சினிமா வாலா பிச்சர்ஸ் கே.சதீஷும் இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.
தரமான படங்களை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்ற உந்துதலோடு இருக்கும் இந்தக் கூட்டணியோடு ‘ஜில் ஜங் ஜக்’ புகழ் விஷால் சந்திரசேகர் இசை அமைத்து இணைகிறார்.
அது மட்டுமல்லாமல், பிரேசில் நாட்டில் தற்காப்பு கலையில் கை தேர்ந்தவரான ஜெர்மி ரோஸ் கலிபோர்னியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த திரைப்படத்திற்காக திலீப் சுப்பராயன் கடந்த ஒரு வருட காலமாக முடி வளர்த்திருப்பது பாராட்டுக்குரியது. இப்போதைய இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா போல் தோற்றமளிக்கும் திலீப்பின் சிகை அலங்காரத்தினால், படக் குழுவினர் அனைவரும் இவரை ‘மலிங்கா’ என்றே அழைக்கின்றனர்.
மொத்தத்தில், அனைத்து குணங்களையும் கொண்ட இந்த ‘சங்குச் சக்கரம்’ திரைப்படத்தில் நிதானமான சுழற்சியையும், தரமான வெளிச்சத்தையும் உறுதியாக எதிர்பார்க்கலாம்.









