தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில் ஜோடி திரைப்படங்களில் அரசாங்கம் நடத்திக் கொண்டிருந்த வேளையில் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் கும்பலில் ஒருவராக நடிகர் ராஜ்கிரண் அறிமுகப்படுத்தபட்டவர்தான் வடிவேலு.
இவரது யதார்த்தமான உடல் மொழியும், வசன உச்சரிப்புகளும் திரையரங்குகளில் படம் பார்க்கும் ரசிகனை ஏகாந்த நிலைக்கு கொண்டு சென்றது.
நகைச்சுவை என்பது இருவர் சேர்ந்து பேசி நடித்தால் மட்டுமே பார்வையாளனை சிரிக்க வைக்க முடியும் என்ற அகராதியை மாற்றி எழுதியவர் இந்த வடிவேலு. திரைப்படங்களில் இவர் தனி ஆளாக எண்ட்ரி கொடுக்கும் போதேஅரங்கம் அதிரும்.
தனிநபராக மக்கள் செல்வாக்கை பெற்ற வடிவேல் 2006-ல் சிம்புதேவன் இயக்கத்தில் ஷங்கர் தயாரித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தில் கதை நாயகனாக நடித்தார். முதல் படமே பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை நிகழ்த்தியது.
அதன் பின் கதாநாயகனாக நடிக்க முன்னுரிமை கொடுக்க தொடங்கினார். பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை. நாயகனாக நடித்து சொந்தமாக தயாரித்த படங்களும் தோல்வியடைந்தன. இப்போதும் வடிவேல் நாயகனாக நடிக்கும் புதிய படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
காமெடி கேரக்டரில் நடித்தபோது நாள் கணக்கில் சம்பளம் வாங்கியதை கணக்கில் கொண்டு, கதாநாயகனாக நடிக்க தேவைப்படும் நாட்கள் எண்ணிக்கைக்கு சம்பளம் கேட்கிறார் வடிவேலு. இதனை கேட்கும் தயாரிப்பாளர் திரும்பி வடிவேலுவிடம் கால்ஷீட் கேட்டு வருவதே இல்லை என்கின்றனர்.
ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க நான்கு கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் வடிவேலு காமெடியனாக நடித்த போது ஒரு நாள் சம்பளம் 8 லட்ச ரூபாய். இன்றைய சினிமா வியாபாரத்தில் வடிவேலு நாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வெளியிட சுமார் 20 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
அதற்குரிய வியாபாரமும், வசூலும் வடிவேல் நடிக்கும் படங்களுக்கு இருக்காது என்பதால் அவரை கதாநாயகனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் சம்பளத்தை பாதியாக குறைத்து கொண்டால் படம் தயாரிக்கலாம் என்கின்றனர். “புலி பசித்தாலும் புல்லை தின்னாது. எனக்கோ பசியே கிடையாது..” என கூறுகிறாராம் வடிவேல்.
இதனால் வடிவேலுவை நாயகனாக நடிக்க வைத்து தயாரிக்க திட்டமிடப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் தற்போது யோகி பாபுவை நோக்கி ஓடி வருகின்றனர்.
‘தர்ம பிரபு’ படத்தின் மூலம் கதாநாயகனாக புது அவதாரம் எடுத்திருக்கும் யோகி பாபுவிற்கு இப்போது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
‘தர்ம பிரபு’ படத்தின் உரிமையை வாங்க விநியோகஸ்தர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கடும் போட்டியும் இதற்கு ஒரு காரணம்.
ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரங்கநாதன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
படத்தில் யோகி பாபு எமனாகவும் ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார்.
மேலும் ஜனனி ஐயர், நடிகர் சாம்ஸ், பார்வதி நாயர் ஆகியோரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.
மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். யுவபாரதி பாடல் வரிகளுக்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைக்கிறார். லோகேஷ் படத் தொகுப்பாளராகவும், பாலசந்தர் கலை இயக்குநராகவும் பணி புரிகிறார்கள். பாலச்சந்தர் எமலோக தளம் அமைத்து ஏற்கனவே அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டார். நிர்வாகத் தயாரிப்பினை ராஜா செந்தில் மேற்கொள்கிறார். இயக்குநர் முத்துக்குமரன் இப்படத்தை இயக்குகிறார்.
படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் வியாபாரத்திற்காக விநியோகஸ்தர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே இந்தப் படத்திற்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதப்படுகிறது.
இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டு ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் யோகி பாபுவையே நடிக்க வைக்கலாமோ என்கிற எண்ணம் தயாரிப்பாளருக்குள்ளும், இயக்குநருக்குள்ளும் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் செய்தி.