full screen background image

“தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவேன்..” – நடிகர் விஷால் அறிவிப்பு

“தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவேன்..” – நடிகர் விஷால் அறிவிப்பு

“அடுத்தாண்டு நடைபெற இருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் இளம் தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து போட்டியிடுவார்கள்…” என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளரான நடிகர் விஷாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அப்போது நடிகர் சங்க நிர்வாகிகள் பலரும் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள். தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, நடிகர் விக்ரம், விவேக், சரவணன் மற்றும் பலர் விஷாலுக்கு போனில் வாழ்த்து கூறினார்கள்.

vishal-birthday-stills-1

மேலும் தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, துணை தலைவர் கதிரேசன், K.E. ஞானவேல்ராஜா, Escape Artiste மதன், ஜேம்ஸ், சுபாஷ் சந்திரபோஸ், தனஞ்ஜெயன், முருகன், இயக்குநர் லிங்குசாமி, நடிகர் சங்க அறக்கட்டளை டிரஸ்டி ஐசரி கணேஷ், நடிகர் சௌந்தர்ராஜன், நியமன குழு உறுப்பினர்கள் மனோபாலா, அஜய் ரத்னம், ஹேமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீமன், உதயா, பிரேம், எடிட்டர் கோலா பாஸ்கர் மற்றும் பலர் நேரில் வாழ்த்து கூறினார்கள்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய விஷால், “தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராக முதல் பிறந்த நாளை இன்றைக்கு கொண்டாடுகிறேன். சந்தோஷமாக இருக்கிறது.

இந்த நடிகர் சங்க நிலத்தில் இருந்த கடனை எல்லாம் அடைந்து, எவ்வித கடனும் இன்றி இருக்கிறது. ஒரு கேள்வி கேட்டோம், பதிலே வரவில்லை என்றவுடன்தான் தேர்தலில் நின்றோம். இந்த நிலத்தில் கட்டிடம் கட்டும்வரை குதிரை போல ஓடிக் கொண்டே இருப்போம். நாங்கள் யாரும் பதவி ஆசைக்காக வரவில்லை. நாங்கள் நடிகர் சங்க கட்டிடம் கட்டும்வரை போராடுவோம். கட்டி முடித்த பின்னர் துணை நடிகர்களின் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும்.

சங்கத்தில் நாங்கள் பதவிக்கு வந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. ஊழல் என்ற பேச்சுக்கே சங்கத்தில் இடமில்லை. சங்கத்தில் ஒரு குண்டுசிக்குகூட சரியாக கணக்கு உள்ளது. நாங்கள் எங்களுக்கு பேனா தேவை என்று சங்கத்தில் இருந்து எடுத்தால்கூட பொருளாளர் கார்த்தி அதற்கு அனுமதிக்கமாட்டார். ஊழல் குற்றச்சாட்டு கூறுபவர்கள் என்ன ஆதாரம் இருக்கிறதோ அதைக் கொண்டு வரட்டும்.

2018, ஜனவரி 14-ம் தேதிக்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்க தீர்மானித்திருக்கிறோம். கட்டிடம் கட்டி முடித்த அடுத்த முகூர்த்தத்தில் எனக்கு அக்கட்டிடத்தில் திருமணம் நடைபெறும்.

அதே போல தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக பல கேள்விகள் கேட்டு வருகிறோம். எந்தவொரு பதிலுமே இதுவரையில் கிடைக்கவில்லை. ஆகையால், அடுத்த தேர்தலில் தயாரிப்பாளர்களாக இருக்கும் நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோரை ஒன்று திரட்டி தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிற்க முடிவு செய்திருக்கிறோம். கேள்வி கேட்டு பதில் வரவில்லை என்றால், அங்கே மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என்பதுதான் எனது கொள்கை.

இதையெல்லாம் வைத்து பிற்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேன் என்று யாரும் எண்ண வேண்டாம். அரசியலுக்கு வரும் எண்ணமெல்லாம் எனக்கில்லை..” என்றார் விஷால்.

Our Score