‘தாயம்’ என்ற வார்த்தையை கேட்டாலே நம் நினைவுகள் நம்முடைய குழந்தை பருவத்திற்கு செல்லும். முந்தைய தலைமுறைகளில் அரசனில் இருந்து சராசரி குடிமகன்வரை அனைவராலும் மதிக்கப்பட்ட, மதிக்கப்பட்டுவரும் ஒரு விளையாட்டு ‘தாயம்’.
அத்தகைய வலிமையான விளையாட்டின் பெயரை தலைப்பாக கொண்டு உருவாகியிருக்கிறது, ‘பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல்’ சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரித்திருக்கும் ‘தாயம்’ திரைப்படம்.
இந்தப் படத்தில் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படப் புகழ் சந்தோஷ் பிரதாப் ஹீரோவாகவும், புதுமுகம் அய்ரா அகர்வால் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – பாஜி, இசை – சதீஷ் செல்வம்(அறிமுகம்), படத் தொகுப்பாளர் – சுதர்சன், கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார், பாடல்கள் – முத்தமிழ், அருண்ராஜா காமராஜ், பாடகர்கள் – எம்.சி.ஜாஸ், சக்திஸ்ரீ கோபாலன், நிக்கித்தா காந்தி, அல்போனேஸ் ஜோசப், ஒலிப்பதிவு – கார்த்திக், அறிமுக இயக்குநரான கண்ணன் ரங்கசாமி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
ஹாரர் – சஸ்பென்ஸ் – திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த ‘தாயம்’ திரைப்படம், இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முழு நீள படத்தை ஒரே அறையில் படமாக்கியிருக்கும் பெருமையைப் பெற்றுள்ளது.
“எட்டு கதாப்பாத்திரங்களை மையமாக கொண்டதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு. ஒரு நேர்காணலுக்காக வரும் எட்டு இளைஞர்கள் ஒரு தனி அறையில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் அப்படி என்ன நேர்காணலுக்கு சென்றார்கள், அது எப்படி முடிவடைகிறது என்பது தான் எங்களின் ‘தாயம்’ படத்தின் ஒரு வரி கதை.
ஒரே ஒரு அறையிலேயே ஒட்டு மொத்த படமும் படமாக்கப்பட்டிருந்தாலும், படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை காட்சிக்கு காட்சி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து கொண்டே போகும்.
ஒரு சிறந்த ஹாரர் படத்திற்கு வலுவான தூணாக அமைவது பின்னணி இசைதான். எனவே, படத்தின் பின்னணி இசையையும், பாடல்களையும் பிரத்தியேகமாக கிரீஸ் – மாசிடோனியா நாட்டின் புகழ் பெற்ற F.A.M.E.S ஸ்டுடியோவில் ரிக்கார்டிங் செய்திருக்கிறோம். இப்போது படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறோம்.
முழுக்க, முழுக்க வித்தியாசமான கதைக் களத்தில் உருவாகியிருக்கும் எங்களின் ‘தாயம்’ திரைப்படமானது, நிச்சயமாக மற்ற எல்லா திகில் படங்களில் இருந்தும் தனித்து விளங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது…” என்கிறார் படத்தின் இயக்குநரான கண்ணன் ரங்கசாமி.