நடிகர் விஷால் ஏழை மாணவிகளின் கல்விக்கு உதவி செய்யும் பொருட்டு தேவி சமூகம் மற்றும் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் புதிய அறக்கட்டளையைத் துவக்கியிருக்கிறார்.
இது பற்றி பத்திரிகைகளுக்கு அவர் அனுப்பியுள்ள செய்தி இது :
“அன்புள்ளம் கொண்ட பத்திரிகை, தொலைக்காட்சி, இணையத்தளம், பண்பலை ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.
நான் சினிமாவுக்கு வந்து பத்தாண்டுகள் ஓடிவிட்டன. திரும்பிப் பார்த்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது..? இத்தனையாண்டுகளில் நான் அறிமுகமானது முதல் சொந்தப் படம் எடுக்கும் இந்தக் காலக்கட்டம்வரையிலும் என்னுடன் கூடவே நீங்களும் இருந்து வந்திருக்கிறீர்கள். என்னை ஊக்குவித்திருக்கிறீர்கள். அதற்கு என் இதயப்பூர்வமான நன்றி.
எனது அனைத்து சந்தோஷமான, பெருமையான தருணங்களிலும் என்னுடன் நீங்களும் இருக்கிறீர்கள் என்கிற உணர்வு எப்போதும் எனக்குள் உண்டு. என்றும் எல்லாவற்றையும் உங்களிடம் பகிரவே ஆசைப்பட்டுள்ளேன். பகிரவும செய்துள்ளேன்.
இப்போது ஒரு செய்தி.
தேவி சமூகம் மற்றும் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை துவக்கியிருக்கிறேன்.
என்னைக் கண்டிப்புடன் வளர்த்தவர் என் அம்மா. எந்த வேலைன்னாலும் செய். ஆனால் அதன் மூலம் நாலு பேருக்கு நல்லது செய் என்பது என் அம்மா எனக்குச் சொல்லியிருக்கும் அறிவுரை.
மேலும் மறைந்த மாமேதை அப்துல் கலாம் அவர்கள் கண்ட கனவு, அனைவரும் கல்வியில் உயர வேண்டும் என்பதுதானே..? அவரது அந்தத் தூண்டல் எனக்குள்ளும் உள்ளது. பெண்களின் கல்விக்கு உதவ வேண்டும் என்பதுதான் இந்த தேவி சமூகம் மற்றும கல்வி அறக்கட்டளையின் முக்கிய குறிக்கோள். இதன் பணிகளைப் பற்றி வெளியில் சொல்வதற்குள்ளாகவே கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மாணவிகள் 16 பேருக்கு இந்த அறக்கட்டளை மூலமாக கல்வி உதவிகள் வழங்கப்பட்டுவிட்டன.
தகுதியான, திறமையான, தேவையுள்ள மாணவிகளை தேர்வு செய்து உதவ எனது விஷால் நற்பணி மன்றத்தை பயன்படுத்தவும் ஆசை.
இந்த நல்ல செய்தியை உங்களிடம் தெரிவிக்கவே இந்தக் கடிதம். எனது அனைத்துவித நல்ல முயற்சிகளுக்கும் என்றென்றும் துணையிருப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.”
நன்றி.
அன்பன்
விஷால்