‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஜாக்சன் துரை’ என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து, தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு நிலையான அங்கீகாரத்தை பெற்று வருகிறார் நடிகர் சிபிராஜ்.
மேலும் இவருடைய நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படங்களான ‘கட்டப்பாவ காணோம்’ மற்றும் ‘சத்யா’ ஆகிய படங்களும், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
தரமான கதை, அதே சமயத்தில் வர்த்தக வெற்றிக்கு தேவையான சிறப்பம்சங்களையும் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிபிராஜ், தற்போது அறிமுக இயக்குநர் வினோத் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் இயக்குநர் V.Z.துரையிடம் இணை இயக்குநராகவும், விளம்பர பட இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
அதிரடி கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த தலைப்பிடப்படாத படத்தை, ‘பாஸ் மூவீஸ்’ சார்பில் விஜய் கே.செல்லையா தயாரிக்கிறார்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த், இசையமைப்பாளர் ராம்ஜீவன், படத் தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குநர் மோகன், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளர் சத்யா என்.ஜெ, வடிவமைப்பாளர் டியூனே ஜான் (24 AM) என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை இந்த திரைப்படம் உள்ளடக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தரமான திரைப்படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கொள்கையோடு இந்த ‘பாஸ் மூவீஸ்’ நிறுவனம் தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்திருக்கிறது என்கிறார் தயாரிப்பாளர் விஜய் கே.செல்லையா.
“சமூதாய பிரச்சனையை மையமாக கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தை, நாங்கள் சென்னை, பொள்ளாச்சி மற்றும் காஷ்மீர் என மூன்று வெவ்வேறு இடங்களில் படமாக்க இருக்கின்றோம்.
இந்தப் படத்தின் கதைக் களம் மூன்று இடங்களில் பயணித்தாலும், அதை ஒரே மைய புள்ளியில் கொண்டு வந்து இணைத்திருப்பதுதான் இந்த கதையின் மிக முக்கியமான சிறப்பம்சமாக விளங்கும்.
என்னுடைய முதல் படத்திலேயே சிபிராஜோடு இணைந்து பணியாற்றுவது, அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. இதுவரை ரசிகர்கள் எவரும் கண்டிராத புதியதொரு சிபிராஜை, அவருடைய கதாபாத்திரம் பிரதிபலிக்கும். அதுமட்டுமின்றி அவருடைய இந்த வித்தியாசமான கதாபாத்திரம், எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய விதத்தில் இருக்கும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் வினோத்.