S.S.ராஜமௌலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி’ படத்தில் கதாநாயகனாக நடித்த பிரபாஸ், அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அனைத்து மொழி ரசிகர்களாலும் கவரப்பட்டிருக்கிறார்.
இந்தியத் திரையுலகத்தையே தனது தனித்துவமான நடிப்பால் உற்று நோக்கவைத்த நடிகர் பிரபாஸ், ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு, தனது அடுத்த படத்திற்கு ஆயுத்தமாகிவிட்டார்.
2013-ம் வருடம் UV கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபாஸ் – அனுஷ்கா நடிப்பில் ‘மிர்ச்சி’ எனும் படம் வெளியாகி வசூல் வேட்டை செய்தது. தற்போது UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி, பிரமோத் மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க சூஜித் சைன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் பிரபாஸ்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு சங்கர்-இசான்-லாய் இசையமைக்க, மதி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தேசிய விருது பெற்ற கலை இயக்குநர் சாபு சிரில் இப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
இன்று பூஜையுடன் துவங்கிய இந்தப் படத்தை தெலுங்குலகின் மூத்த நடிகரான கிருஷ்ணம் ராஜுவும், பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜுவும் இணைந்து துவக்கி வைத்தார்கள்.
இந்த பூஜை நிகழ்ச்சியில் நடிகர் பிரபாஸ், இயக்குநர் சூஜித் சைன், தயாரிப்பாளர்கள் மற்றும் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.