மக்கள் பாசறை தயாரித்து வழங்கும் ஆர்.கே. நடிக்கும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, 1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் வடபழனி கமலா திரையரங்கில் நேற்று மாலை சிறப்பாக நடந்தது.
இந்த விழாவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசும்போது, நடிகரும், தயாரிபபாளருமான ஆர்.கே. கொண்டு வந்திருக்கும் ‘ஹிட் பாக்ஸ்’ திட்டத்தை பெரிதும் பாராட்டினார்.
நாசர் பேசும்போது, “நான் 500 படங்களை கடக்கப் போகிறேன். இங்கு வந்தது இந்த ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது என்பதற்காக அல்ல. அதிக சம்பளம் கொடுத்தார்கள் என்பதற்காக வரவில்லை. ஒரு குடும்பம் போல படப்பிடிப்பு மகிழ்ச்சியாக போனது என்பதற்காக வரவில்லை .
எல்லாரும் தொடாத ஒரு விஷயத்தை துணிச்சலாகச் செய்கிறாரே ஆர்.கே., அது வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தவே வந்திருக்கிறேன். தனக்குள் கருக்கொண்ட ஒரு விஷயத்தை செயல்படுத்துவது கடினம். அது ஒரு வலி மட்டுமல்ல; அது ஒரு யாகம். அதை ஆர்.கே. செய்து முடித்திருக்கிறார்.
இன்று தயாரிப்பாளர்கள் படும் வேதனைகள் கொஞ்சமல்ல. இன்று தயாரிப்பாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள், அவமானப்படுகிறார்கள்.. மிரட்டப்படுகிறார்கள். இதற்கெல்லாம் ஆர்.கே.வின் திட்டம் ஒரு தீர்வாக இருக்கும்.
இன்று 380 ரக விமானம் எல்லாம் ஐந்து நட்சத்திர ஓட்டல் போன்ற எவ்வளவோ வசதியுடன் வந்துவிட்டது. ஆனால் அன்று ஒற்றை விசிறியுடன் தட்டுத் தடுமாறிப் பறந்த ரைட்ஸ் சகோதரர்களை மறக்க முடியாது அல்லவா..? அவர்களைபோல் நாளை ஆர்.கே.வும் இந்தத் திட்டத்துக்கான முன்னோடியாகப் பேசப்படுவார்…” என்றார்.