full screen background image

விமான நிலையத் தாக்குதல்-தாக்கியவரே விஜய் சேதுபதி மீது வழக்கு தொடுத்துள்ளார்

விமான நிலையத் தாக்குதல்-தாக்கியவரே விஜய் சேதுபதி மீது வழக்கு தொடுத்துள்ளார்

பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியின் உதவியாளர் தன்னை தாக்கியதாகவும், அவமரியாதை செய்ததாக நடிகர் மகாகாந்தி என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த நவம்பர் 2-ம் தேதியன்று தனியார் டிவி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் சேதுபதி பெங்களூருக்கு விமானத்தில் சென்றார். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த நடிகர் மகா காந்தி என்பவருடன் விஜய் சேதுபதிக்கு மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் பின்பு விமான நிலையத்தைவிட்டு வெளியில் வந்தபோது நடிகர் மகா காந்தி, ஆவேசத்துடன் விஜய் சேதுபதியின் உதவியாளரான ஜான்சனை எட்டி உதைத்தார். இந்தத் தாக்குதலின் வீடியோ அன்றைக்கே அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி பரபரப்பானது.

இதன் பின்பு விமான நிலையத்தில் இருந்த போலீஸார் மூலமாக இரு தரப்பினரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அப்போது இரு தரப்பினரும் சமாதானமாகப் போவதாக எழுதிக் கொடுத்துவிட்டு கிளம்பிச் சென்றனர்.

இப்போது திடீரென்று  அந்த விமான நிலையத் தாக்குதலில் ஈடுபட்ட நடிகர் மகா காந்தி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், தான் மருத்துவ சிகிச்சைக்காக மைசூர் செல்வதற்காக நவம்பர் 2-ம் தேதி இரவு பெங்களூரு சென்றபோது, பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராதவிதமாக சந்தித்ததாகவும், திரைத்துறையில் அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால்,  தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார் மகா காந்தி.

விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தன் மீது, அவரது மேலாளர் ஜான்சன் மூலமாக தாக்கியதாகவும், காதில் அறைந்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே திரைத் துறையில் இருக்கின்ற சக நடிகரை பாராட்ட சென்ற தன்னை தாக்கி, அதை உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை, சைதாப்பேட்டை 9-வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு இந்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

Our Score