ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பேய் பசி’.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் இசைஞானி இளையராஜாவின் அண்ணனான ஆர்.டி.பாஸ்கரின் மகன், ஹரி பாஸ்கர் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு இசையை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக் கொண்டனர்.
முதலில் படத்தின் டிரெயிலரை வெளியிட்டார்கள். ஒரு டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோருக்குள் ஹீரோ, ஹீரோயின், நண்பன், நண்பிகள் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த ஸ்டோருக்குள் இருக்கும் பேய் அவர்களை கொலை செய்ய விரட்டுகிறது. அந்தப் பேயிடம் இருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பது போல இருந்தது டிரெயிலர்.
அதோடு இதே தயாரிப்பு நிறுவனத்தின் 2-வது மற்றும் 3-வது தயாரிப்பு பற்றிய டீஸரையும் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள் படக் குழுவினர்.
விழாவில் ஒளிப்பதிவாளர் டோனி சான் பேசுகையில், “இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் மிகச் சிறந்த ஒரு மனிதர். எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் மிகவும் ஜாலியாக வேலை செய்தார். லைவ் சவுண்டில் வேலை பார்த்தது மிகப் பெரிய அனுபவம். யுவன் ஷங்கர் ராஜா சாரின் மிகப் பெரிய ரசிகன் நான். அவரின் கற்றது தமிழ் பாடல்களை கேட்டு மயக்கத்தில் இருந்திருக்கிறேன். அவர் படத்திலேயே நான் வேலை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது…” என்றார்.
தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் பேசும்போது, “என் தந்தை 90-களிலேயே சினிமா தயாரிப்பதை நிறுத்தி விட்டார். அதை நான் மீண்டும் கையில் எடுத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. யுவனை மிகவும் தொந்தரவு செய்து நல்ல நல்ல பாடல்களை கேட்டு வாங்கியிருக்கிறோம். அவரும் இது என்னுடைய படம் என்று மிகவும் உரிமை எடுத்து எங்களுக்காக இசையமைத்து கொடுத்திருக்கிறார்…” என்றார்.
தயாரிப்பாளர் காட்ரகட்டா பிரசாத் பேசுகையில், “பேய் பசி என்ற தலைப்பை கேட்டவுடன் இது ஹாரர் படம் என நினைத்தேன். ஆனால் இது திரில்லர் படமாக வந்திருக்கிறது. முதல் படத்தின் ரிலீஸுக்கு முன்பேயே 2-வது, 3-வது படங்களை அறிவித்திருப்பது தயாரிப்பாளர் ஸ்ரீநிதி இந்த படத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது…” என்றார்.
இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், “இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஹரி என்னுடைய சகோதரன்தான். எங்கள் குடும்பத்தில் சிறு வயதில் இருந்தே நடிக்க விரும்பியவன். அவனை என் படத்தில் அறிமுகப்படுத்தவில்லை என்று அவனுக்கு என் மேல் கோபம்.
அதன் பிறகு தனியாக முயற்சித்து ஒரு படத்தில் நடித்து விட்டான். படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான முயற்சி. இந்த மாதிரி கதையெல்லாம் சொல்லி, புரிய வைத்து தயாரிப்பாளரை ஒப்புக் கொள்ள செய்வது கஷ்டம். அதை செய்து, விர்ச்சுவல் ரியாலிட்டி கான்செப்டில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..” என்றார்.
இயக்குநர் நலன் குமாரசாமி பேசுகையில், “இயக்குநர் சீனுவும், நானும் நண்பர்கள். சினிமாவில் எனக்கு நல்ல நண்பர்கள் அறிமுகமாக காரணம் சீனுதான். நல்ல சினிமா அறிவு உடையவர். சூது கவ்வும் படத்தில் பல விஷயங்கள் ஸ்ரீநிவாஸ் சொன்னதுதான். இந்த படத்தில் பல புதுமையான, நல்ல விஷயங்களை எதிர்பார்க்கிறேன்…” என்றார்.
நடிகர் ஆர்யா பேசுகையில், “ஹரி பாஸ்கர் என்னுடைய ஜிம் மேட். யுவன் இசையில் நாயகனாக அறிமுகமாவது ஒரு பெரிய பாக்கியம். இந்த படத்தை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். புது விஷயங்களை கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இந்த படமும் ஏற்றுக் கொள்ளப்படும்…” என்றார்.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசுகையில், “நானும் ஹரியும் இதே சத்யம் தியேட்டர்ல நிறைய படங்கள் பார்த்திருக்கிறோம். அப்போது என்னுடைய படமும் இதே தியேட்டர்ல வரணும்னு ஆசையாக சொல்வான் ஹரி. தற்போது அதே இடத்தில் இசை வெளியீடு நடக்கிறது. தான் விரும்பியதை ஹரி நிச்சயமாக சாதிப்பான் என்று நம்புகிறேன்..” என்றார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகையில், “சூது கவ்வும்’ படத்துக்கு இசையமைத்த காலத்தில் இருந்தே ஸ்ரீநிவாஸ் கவிநயம் எனக்கு அறிமுகம். அவருடைய குறும் படம் ஒன்றை பார்த்தேன். நல்ல திறமையாளர். அவர் படம் இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அவர் இயக்கிய படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. என்னுடைய முதல் படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா சார்தான் ரிலீஸ் செய்தார். இன்று அவர் படத்தின் இசை வெளியீட்டில் அவருடன் மேடையில் அமந்திருப்பதில் எனக்கு பெருமை …”என்றார்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசுகையில், “ஹரிக்கு சின்ன வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம். எங்கள் வீட்டாருடன் கோபித்து கொண்டு ஆஸ்திரேலியா கிளம்பி விட்டான். பின் நானே அவனை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்க முடிவு செய்தேன், அதன் பின்னும் இலங்கைக்கு சென்று விட்டான். தற்போதுதான் இந்த படத்தில் நடித்திருக்கிறான். நான்தான் இசையமைக்க வேண்டும் என்று சொன்னான். அவனுடைய அன்புக்காக இசையமைத்திருக்கிறேன். அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டியது இந்த காலகட்டத்தில் அவசியம். காசு, பணம் தாண்டி அன்புக்காக எல்லோரும் முன் வர வேண்டும்…” என்றார்.
நடிகர் ஹரி பாஸ்கர் பேசுகையில், “நான் நடிப்புத் துறையில் ஈடுபட வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை. என்னை இயக்குநருக்கு அறிமுகப்படுத்தி வைத்த பூர்ணிமாவுக்கு நன்றி. நான் உட்பட 4 பேர் புதுமுகங்களாக இந்தப் படத்தில் அறிமுகம் ஆகிறோம். எங்களை வைத்து லைவ் சவுண்டில் இந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவிநயம். மிகப் பெரிய சாதனை அது…” என்றார்.
விழாவில் பேசிய இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவிநயம், “முழுக்க, முழுக்க ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் நடக்கும் முதல் படம் இதுதான் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தின் முதுகெலும்பு யுவன் ஷங்கர் ராஜாதான். பின்னணி இசையை மிகச் சிறப்பாக கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தனர், கதையைக்கூட கேட்கவில்லை. காஸ்ட்யூம் இந்த படத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த படத்தில் லைவ் சவுண்ட் முயற்சி செய்திருக்கிறோம். இத்திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்…” என்றார்.
இந்த விழாவில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, தீரஜ் ரெட்டி, இயக்குநர் கிருத்திகா உதயநிதி, தேனாண்டாள் ஹேமா ருக்மணி, எடிட்டர் மோகன் முருகதாஸ், கலை இயக்குநர் மதன், ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.