கேரளாவில் மிகப் பெருமளவில் பேசப்பட்ட குற்றவாளி மற்றும், இந்தியா முழுவதும் போலீஸாரால் தேடப்பட்ட கேரளாவை சேர்ந்த குற்றவாளி ‘குரூப்’ என்பவர்.
இவருடைய கதையை மையமாக கொண்டு, இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குரூப்’.
Wayfarer Films & M-Star Entertainments ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளன.
இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன், விஜயராகவன் சுரபி லக்ஷ்மி, கிரிஷ், குஞ்சன், சாதிக் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நிதின் K.ஜோஷ் கதையினை எழுதியுள்ளார். திரைக்கதை மற்றும் வசனத்தை டேனியல் சயூஜ் நாயர் & K.S.அரவிந்த் இணைந்து எழுதியுள்ளனர்.
நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் படத் தொகுப்பு செய்துள்ளார். சுஷின் ஸ்யாம் இசை பின்னணி கோர்ப்பை செய்துள்ளார். வினி விஸ்வா லால் கிரியேட்டிவ் இயக்குநராக பணியாற்றியுள்ளார். பங்லன் கலை இயக்கம் செய்ய, விக்னேஷ் கிஷன் ராஜேஷ் ஒலி வடிவமைப்பு செய்துள்ளார். ரோனக்ஸ் சேவியர் ஒப்பனை பணிகளை செய்ய, பிரவீன் வர்மா உடை வடிவமைப்பு செய்துள்ளார். தீபக் பரமேஸ்வரன் புரொடக்சன் கண்ட்ரோலராக பணியாற்றியுள்ளார். இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அசத்தலான ஒளிப்பதிவு, பரபரக்கும் படத் தொகுப்பு, பிரம்மாண்டமான மேக்கிங் என படத்தின் ஒவ்வொரு சிறு விசயமும், ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
இந்த ‘குரூப்’ படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் பேசும்போது, “இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் என்னுடன் இணைந்துதான் திரைத்துறைக்கு வந்தார். நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள், எங்களது முதல் படத்திலேயே ‘குரூப்’ பற்றி நிறைய விஷயங்களை பேசிக் கொண்டிருப்பார். எப்படியாவது இந்தப் படத்தை நான் கண்டிப்பாக எடுப்பேன் என்று சொன்னார்.
அந்த நேரத்தில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க முடியுமா என்று எனக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் இப்போது மீண்டும் ‘குரூப்’ ஒரு நல்ல திரைக்கதையாக வந்திருக்கிறது என்று ராஜேந்திரன் கூறினார். நானும் அதைப் படித்தேன். அதன் திரைக்கதை ஸ்டைலே புதிதாக இருந்தது. கண்டிப்பாக இப்படத்தை பண்ண வேண்டும் அப்போதுதான் முடிவு செய்தோம்.
குரூப் குடும்பத்திலிருந்து ஏதாவது பிரச்னை வரும் என்ற அச்சம் எங்களுக்குள் இருந்தது. நல்ல வேளையாக அது போன்று எந்த ஒரு தடையும் வரவில்லை..! ஆனால் குரூப்பால் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து எவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம்.
படம் உருவான பிறகு அவர்களை அழைத்து, படத்தை போட்டுக் காட்டினோம். உங்களுக்கு ஏதாவது தவறாகத் தெரிந்தால் சொல்லுங்கள். மாற்றி விடுகிறோம் என்றோம். அவர்கள் தங்கள் மன வலியை மறைத்துக் கொண்டு “பணம் சம்பாதிப்பது எங்கள் நோக்கமில்லை” என்றார்கள். அவர்களுக்குப் படம் பிடித்திருந்தது. அதுவே எங்களுக்கு மகிழ்ச்சிதான்.
இந்தப் படத்திற்குப் பின்னால் எங்களுடைய கடும் உழைப்பு இருக்கிறது. மூன்று வருட ஆராய்ச்சிக்கு பிறகுதான் திரைக்கதை அமைத்திருக்கிறோம். ஒவ்வொரு நடிகர்களுமே உண்மையில் வாழ்ந்தவர்களை பிரதிபலித்துள்ளார்கள். அந்தக் காலக்கட்டத்தை கொண்டு வருவதுதான் மிக கடினமாக இருந்தது. அந்தக் கால மும்பையை திரும்பவும் திரையில் கொண்டு வந்திருக்கிறோம்.
இந்தக் ‘குரூப்’ எனக்கு மிக சவாலாக இருந்த படம். என் வாழ்வில் மிக முக்கியமான படமும்கூட. ரசிகர்களுக்கு இது மிகச் சிறந்த அனுபவத்தைத் தரும்…” என்றார்.
‘குரூப்’ திரைப்படம் வரும் 2021 நவம்பர் 12-ம் தேதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.