செவன்த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சக்திவேல் தயாரிக்கும் வித்தியாசமான படம் ‘ஆறாம் வேற்றுமை.’
இந்த படத்தில் அஜய் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கோபிகா என்ற புதுமுகம் நடிக்கிறார்.
மற்றும் யோகிபாபு, உமாஸ்ரீ, அழகு, சூரியகாந்த், சேரன்ராஜ், பரதேசி பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இசை – கணேஷ் ராகவேந்திரா, ஒளிப்பதிவு – அறிவழகன், நடனம் – பாபி ஆண்டனி, பாடல்கள் – யுகபாரதி, மோகன்ராஜ், தயாரிப்பு – சக்திவேல், எழுத்து, இயக்கம் – ஹரிகிருஷ்ணா.
படம் பற்றி இயக்குநர் ஹரிகிருஷ்ணா பேசும்போது, “மாபெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் திரைப்படமான அபோகலிப்டா’ மாதிரியான படம்தான் இந்த ‘ஆறாம் வேற்றுமை.’
இந்தப் படம் இன்றைய காலகட்டத்தைப் பற்றிய படம் இல்லை. சுமார் 900 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆதிவாசிகள் பற்றிய படம்.
ஆறாவது அறிவில் வேறுபட்டு வாழும் மனிதர்களைப் பற்றி கதை நகர்வதால் ‘ஆறாம் வேற்றுமை’ என பெயர் வைத்தோம்.
தங்களுக்கு என்று பெயரும் மொழியும் இல்லாமல் வாழும் இனம். நமக்கு அறிமுகமான மொழியே இல்லை இந்த படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓர் இடம், ஓர் இனம், ஓர் வாழ்க்கை என வாழத் தெரியாமல் வாழ்ந்த ஆதிவாசிகளைப் பற்றிய படமே இந்த ‘ஆறாம் வேற்றுமை.’ மூன்று மலைகளில் வாழும் மூன்று விதமான மக்களைப் பற்றிய படம்தான் இது..
ஆறு அறிவு கொண்ட மனிதன் சிந்திக்கிறான். நாகரிக வாழ்க்கையை வாழ்கிறான். அதே ஆறு அறிவு கொண்ட மனிதன்தான் காட்டுவாசிகளாகவும் வாழ்கிறான்.
படப்பிடிப்புக்காக இன்றைய அறிவியல் வளர்ச்சி எதுவும் இல்லாத காட்டுப் பகுதியை தேடிப் பிடித்து அங்கே படப்பிடிப்பை நடத்தினோம். பல கிலோ மீட்டர்கள் நடந்தே போக வேண்டி இருந்தது. எல்லோருமே எங்களது முயற்சியையும் கதை பற்றிய நம்பிக்கையையும் மனதில் கொண்டு எல்லா சிரமங்களையும் பொறுத்துக் கொண்டார்கள்.
இந்த திரைப்படத்தை வாங்கி வெளியிடுகிறார் ஸ்ரீமுத்தமிழ் லஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் R.பாலசந்தர்.
படத்தின் முழு படப்பிடிப்பும் தர்மபுரி, சேலம், அரூர், அதிராம்பள்ளி போன்ற இடங்களில் உள்ள காடுகளில் நடைபெற்றுள்ளது…” என்றார் இயக்குநர் ஹரிகிருஷ்ணா.