இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு புதிய கதைக் களத்தில் மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகிறது ‘உத்தரவு மகாராஜா’ திரைப்படம்.
‘திருநெல்வேலி’ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ‘இளைய திலகம்’ பிரபுவோடு, உதயா இணைந்து நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் நடிகர் பிரபு இதுவரை ஏற்றிராத ஒரு புதிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் கோவை சரளா, ஸ்ரீமன், மன்சூரலிகான், மனோபாலா, அஜய் ரத்னம் மற்றும் பல நட்சத்திரங்களுடன் நீண்ட இடைவெளிக்கு பின் குட்டி பத்மினி நடிக்க இருக்கிறார். ஸ்டார் விஷன் சார்பாக கணேஷ் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா. இவர் தமிழில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ மற்றும் பல இந்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர். புதிய இசையமைப்பாளர் ஒருவர் இப்படத்தில் அறிமுகமாகிறார். எடிட்டிங் டான் பாஸ்கோ. சண்டை பயிற்சி தளபதி தினேஷ். பாடல்களை நா.முத்துகுமார் எழுத, நடனத்தை சின்னி பிரகாஷ் அமைக்க, தயாரிப்பு நிர்வாகத்தை தேனி சங்கர் கவனிக்கிறார். மக்கள் தொடர்பு நிகில்.
இயக்குநராக ஆஸிப் குரைஷி அறிமுகமாகிறார். இவர் தமிழ் இந்தி மற்றும் பெங்காலி படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். ஏராளமான விளம்பர படங்களை இயக்கி கொண்டிருப்பவர்.
இப்படத்தின் சிறப்பம்சம் யாதெனில் திரைக்கதையில் ஒரு புதிய முயற்சியை இயக்குநர் கையாண்டிருக்கிறாராம். மற்ற திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை கலந்த சைக்கோ, த்ரில்லர் கதை இது. இப்படத்திற்காக பிரத்யேகமாக உடலை மெலிய செய்தும், மொட்டை அடித்தும், தாடி வைத்தும் மூன்றுவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார் உதயா.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வரும் மார்ச் 24-ம் தேதி கோவையில் தொடங்கி ஏப்ரல் 15 வரை ஊட்டியில் நடைபெற உள்ளது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெறும்.









