full screen background image

“மதுரைக்கார போலீஸ்காரனாக நடிப்பது இதுதான் முதல்முறை” – ‘வதந்தி சீசன்-2’ தொடர் பற்றி சசிகுமார் பேச்சு!

“மதுரைக்கார போலீஸ்காரனாக நடிப்பது இதுதான் முதல்முறை” – ‘வதந்தி சீசன்-2’ தொடர் பற்றி சசிகுமார் பேச்சு!

பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ எனும் இணைய தொடர் காணக் கிடைக்கும்  விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நேற்று மதியம் நடைபெற்ற இந்த சந்திப்பில் சசிகுமாருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், தயாரிப்பாளர்கள் புஷ்கர்- காயத்ரி, இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் மற்றும் பிரைம் வீடியோ உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி பேசுகையில், 

”இந்த இணைய தொடர் மிக சிறப்பாக உருவாகி இருக்கிறது. இதைப் பற்றி நாங்களே பெருமிதமாக பேசக் கூடாது.

இயக்குநர் ஆண்ட்ரூஸ், ‘ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படக் கூடாது என பணியாற்றும் ஒரு கடமை தவறாத மூசா ராசா என்ற காவல்துறை அதிகாரியை பற்றிய கதையை சொன்னவுடன் எங்களுக்கு பிடித்தது.

அதிலும் அந்தக் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கிறார் என்றவுடன்.. அவருக்கு ஏற்றார்போல் கதையை எழுதியது போல் இருந்தது.

மேலும் இந்த இணையத் தொடரில் ஏராளமான புது இளம் திறமைசாலிகள் அறிமுகமாகி இருக்கிறார்கள்.

அமேசான் ப்ரைம் வீடியோவின் ஆதரவு எப்போதும்போல் மிகச் சிறப்பானதாக இருந்தது. இந்தத் தொடரும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மிகவும் கவரும்.

‘வதந்தி சீசன்-1’ கதையை இயக்குநர் ஆண்ட்ருஸ் எழுதிக் கொண்டிருக்கும்போதே… சீசன்-2 விற்கான ஐடியாவை அவர் வைத்திருந்தார்.

சீசன்-1 ஒரு கதையாக இருக்க வேண்டும்… ஒரு க்ரைம் இருக்க வேண்டும். ஒரு ஊரில் நடந்திட வேண்டும்.  சீசன்-2, வேறொரு க்ரைம். அதனை மதுரை பின்னணியில் சொல்லலாம் என சொன்னார்.

இதுதான் எங்களுக்கு முதல் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இயக்குநர் ஆண்ட்ரூஸ் மதுரையை சேர்ந்தவர் அல்ல. இருந்தாலும் அந்த கதைக் களத்தை பற்றி நன்றாக நன்றாக தெரிந்து கொள்வதற்காக பல மாதங்கள் மதுரையில் தங்கி மக்களுடன் கலந்து வாழ்ந்தார்.

அவர்களுடைய நடவடிக்கைகளை ஆய்வு செய்து அதற்குப் பிறகு திரைக்கதையை இறுதி செய்தார். இதுவும் எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

இதை திரையில் அவர் சின்ன சின்ன விசயங்கள் மூலம் விவரித்திருக்கிறார். அப்போதுதான் பார்வையாளர்களால் ‘மூஸா ராசா’ எனும் கதாபாத்திரத்துடன் எளிதாக பயணிக்க முடியும்.

‘மூஸா ராசா’ என்ற கதாப்பாத்திரத்தை எழுதி முடித்துவிட்டு, இதற்காக சசிகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சொன்னதும் எனக்கும் கூடுதல் சந்தோஷத்தை கொடுத்தது.

நாங்கள் இருவரும் சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரம் ‘ படத்தின் முதல்நாள் முதல் காட்சியை பார்த்து வெகுவாக கொண்டாடினோம். அது முதல் சசிக்குமாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது.

மதுரை பின்னணி – சசிகுமார் நடிக்கிறார் – ஆனால் ஒரு அருவாள் இல்லை…. கத்தியில்லை… ரத்தம் இல்லை… என்றுதான் முதலில் தோன்றியது.

ஆனால் சசிகுமாரிடம் நீங்கள் சில நிமிடங்கள் பேசினாலே… அவர் ‘மூஸா ராசா’ என்ற கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்பது தெரிய வரும். அவ்வளவு அன்பானவர். அடக்கமானவர். அதிர்ந்தும் பேசாதவர்.

வதந்தி சீசன்-2 படத்தின் பணிகளை தொடங்கிய தருணத்திலிருந்து ஒவ்வொரு விசயமும் எங்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருந்தது.

கதையாகட்டும். கதாபாத்திரங்கள் ஆகட்டும்… இசையாகட்டும்… ஒவ்வொரு விசயமும் எங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.

வதந்தி சீசன்-2-விற்கு இயக்குநர் ஆண்ட்ரூஸ் திரைக்கதையை எழுத நிறைய நேரம் எடுத்துக் கொண்டார். சீசன்-2-விற்காக அவர் எழுதி நிறைவு செய்த மூன்றாவது கதைதான் இது. அதனால்தான் வதந்தி சீசன்-1 வெளியாகி, 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சீசன்-2 வெளியாக உள்ளது…” என்றார்கள்.

 

 

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் பேசுகையில், ”வதந்தி சீசன்-1, ஒரு ஆர்கானிக் சக்சஸ். அதற்குப் பிறகு வதந்தி சீசன்-2-வை அறிமுகப்படுத்தும்போது.. இதற்கான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது.

யாரும் பார்க்காத தருணத்தில் கல்லை தூக்குவது பெருமை அல்ல. எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கல்லை தூக்குவதுதான் சவாலானது.

எதிர்பார்ப்புகள் இல்லாத தருணத்தில் வதந்தி சீசன்-1-ஐ இயக்கியதைவிட… அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் இந்தத் தருணத்தில் இதன் சீசன்-2-வை இயக்கி வெற்றியடைய செய்வதில்தான் எனக்கான சவால் இருக்கிறது என நினைத்தேன்.  

இந்தக் கதையை எழுதி அமேசான் பிரைம் வீடியோவிற்கு சமர்ப்பிப்பதற்கு முன் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி அவர்களிடம் சமர்ப்பித்தேன்.‌

அவர்கள்தான் இன்னும் ஏதாவது புதுமையாக சேர்த்துக் கொள். சேர்த்துக் கொண்டே இரு… என ஊக்கமளித்துக் கொண்டே இருந்தார்கள்.

திரைக்கதையை நிறைவு செய்த பின் அவர்களின் கஷ்டம் எதுவும் எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் நான் இதனை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.

அவர்கள்தான் அனைத்து விசயங்களையும் ஒன்றிணைத்து ஒருங்கிணைத்தனர். இதற்காக இந்தத் தருணத்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

ஒரு முழு நீள திரைப்படத்தை உருவாக்குவதற்காக படமாக்கப்படும் படப்பிடிப்பு நாட்களில்… மூன்று திரைப்படங்களுக்கான படப்பிடிப்பை நடத்த வேண்டியது இருந்தது.

இதற்காக தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் இதில் இணைந்து பாடுபட்ட அனைவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை அர்ப்பணிப்புடன் வழங்கினர்.

பார்வையாளர்கள் இந்தத் தொடரை பார்க்கும்போது அனைவரும் வதந்தி சீசன்-2 தொடரின் கதை களத்திற்குள் பயணித்து விடுவீர்.

ஆனால் அந்த உலகத்தை உருவாக்குவதற்காக தொடர்ந்து 43 நாட்கள் மதுரை, காரைக்குடி, ராமநாதபுரம், திருச்சி, ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தினோம்.

அனைவரும் தொடர்ந்து 18 மணி நேரம் உழைத்தனர். அனைவருக்கும் இந்த ‘வதந்தி சீசன்-2’ நன்றாக வரும் என நம்பிக்கை வைத்தனர். இதற்காகவும் அனைவருக்கும் நன்றி.

வதந்தி சீசன்-1 மிகப் பெரிய வெற்றி பெற்றதற்காக எஸ்.ஜே.சூர்யாவிற்கு நன்றி. சீசன் 1-ல் எஸ்.ஜே.சூர்யா அந்தக் கதாப்பாத்திரத்தை கையாண்டவிதம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது.  

‘வதந்தி சீசன்-2’-விற்காக சசிகுமாரை அணுகி கதை சொல்லும்போது நான் முழு கதையையும் எழுதி நிறைவு செய்யவில்லை.

அவரை மதுரையில் சந்தித்து கதையை சொன்னதும் அவர் எந்த தாமதமும் செய்யாமல் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார்.

அதன் பிறகு “முழு திரைக் கதையையும் எழுதி நிறைவு செய்துவிட்டு வாருங்கள்” என்றார். அவர் நடிக்க ஒப்புக் கொண்டவுடன் அவருக்காக மீண்டும் ஒரு முறை ‘மூஸா ராசா’ கதாபாத்திரத்தை சிறப்பாக எழுத தொடங்கினேன்.

இதுவே ‘வதந்தி சீசன்-1’-க்கும் சீசன் இரண்டுக்குமான மிகப் பெரிய வித்தியாசமாக அமைந்துவிட்டது.

இசையமைப்பாளர் சிமோனை பற்றி குறிப்பிட வேண்டும். வதந்தி சீசன்-1-க்கான இசை வேறு. சீசன்-2-விற்கான இசை வேறு. அவரும் ஒரு வகையில் கதை சொல்லித்தான்.

நான் கண்ணை மூடிக்கொண்டு இந்தத் தொடரின் எபிசோட்டை பார்க்கும்போது… இசையே கதையை சொல்லும். அந்த அளவிற்கு அவர் கலை நுட்பம் கொண்டவர். அதனால் அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகர் சசிகுமார் பேசுகையில், “இந்த ‘வதந்தி-2′ கதையை இயக்குநர் மதுரையில்  என்னை சந்தித்து சொன்னார். டைட்டிலை கேட்டவுடன் நான்தான் மணி கதாபாத்திரத்தில் நடிக்க போகிறேன் என்று நினைத்திருந்தேன்.

மதுரை என்பதால் மணி, குட்டி புலி என ரௌடியாகத்தான் யோசிப்பார்கள். நானும், இதுவரை 30 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். யாரும் என்னை போலீசாக நடிக்க வைக்க வேண்டும் என யோசிக்கவில்லை.

இயக்குநரிடம் இரண்டு, மூன்றுமுறை திரும்பத் திரும்ப கேட்டேன். “நான் மணி கதாபாத்திரத்தில் நடிக்கிறேனா? அல்லது போலீஸ் ‘மூஸா ராசா’ கேரக்டரில் நடிக்கிறனா?” என்று கேட்டேன். அவர்தான் “நீங்கள் போலீசாக மூஸா ராசா கேரக்டரில் நடிக்கிறீர்கள்” என்றார்.

மதுரை பின்னணியில் என்னை ரவுடியாக இல்லாமல் போலீசாக நினைத்து கதையை எழுதியதால் அந்த கதையை முழுவதுமாக கேட்டேன்.

இந்தக் கேரக்டர் இவ்வளவு சிறப்பாக மெருகேறி இருக்கிறது என்றால்… அதற்கு இயக்குநர் ஆண்ட்ரூஸின் கடும் உழைப்புதான் காரணம்.

போலீஸ் என்றவுடன் அந்த ட்ரெஸ்ஸை போட்டுக் கொண்டு கம்பீரமாக நடக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் இயக்குநர் அப்படி எல்லாம் நடிக்க கூடாது. இயல்பாக இருக்க வேண்டும் என்றார்.  அந்தக் கதாபாத்திரம், மதுரையில் இருக்கும் ஒரு சாதாரண போலீஸ் என்பதை அடிக்கடி நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பார்.

அவர் சொன்ன கதையும் எனக்கு பிடித்திருந்தது. ஒரு நிரபராதியை காப்பாற்ற போலீஸ் போராடும் கதை. போலீஸ் பாயிண்ட் ஆஃப் வ்யூவில்தான் இந்த ‘வதந்தி சீசன் -2’-வின் கதை நகரும்.

இதுவரை வெளியான இன்வெஸ்டிகேட்டட் திரில்லர் ஜானரிலான கதைகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற பரபரப்புதான் இருக்கும்.

ஆனால் இந்தத் தொடரில் ஹீரோதான் பாவம்! போலீஸ் எப்படியாவது குற்றவாளியை கண்டுபிடித்து, இவனை விடுவித்துவிட வேண்டும் என்ற பரபரப்பு இருக்கும்.

அதைவிட ‘வதந்தி சீசன்-1’ எஸ்.ஜே.சூர்யா நடித்து பெரிய ஹிட்டான தொடர். அதற்கும் இந்தத் தொடருக்கும் சம்பந்தம் இல்லை.

இருந்தாலும் இந்தத் தொடரும் புதுமையாக இருக்கும். இந்த இணையத் தொடர் வெளியான பிறகு நான் நிறைய போலீஸ் கதாபாத்திரங்களில் நடிப்பேன் என நினைக்கிறேன்.

இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மிகவும் சிரமப்பட்டேன். படப்பிடிப்பின்போது ஏதேனும் ஒரு இடத்தில் லேசாக சிரித்தாலும்… “மூஸா ராசா கேரக்டர் சிரிக்காது” என இயக்குநர் சொல்லிக் கொண்டே இருப்பார்.  

படப்பிடிப்பு தொடங்கி இரண்டு நாள்வரை சற்று சிரமமாக இருந்தது. அதன் பிறகு அது பழகிவிட்டது. இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது இயக்குநர் என்ன சொன்னாரோ.. அதை மட்டும்தான் செய்தேன்” என்றார்.

நடிகர் விவேக் பிரசன்னா பேசுகையில், ”ட்ரீம் ப்ரொடியூசர் மற்றும் ட்ரீம் டைரக்டர் உடன் இருக்கும்போது எங்களுக்கெல்லாம் நடிப்பு தானாகவே வரும்.‌

எல்லாமே பேப்பரில் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் என்ன சொல்கிறாரோ.. அதைச் செய்தால் மட்டும் போதும்.

புஷ்கர் – காயத்ரி அவர்களுடைய தயாரிப்பு என்றால்.. அதில் பணியாற்றும் அனைவருக்கும் சந்தோஷம்தான். அனைவரையும் அவர்கள் அரவணைத்து அக்கறை காட்டி அன்பு செலுத்துவார்கள்.‌

என்னைப் பொறுத்தவரை இயக்குநர் ஆண்ட்ரூஸ் இந்தியாவிலேயே மிகச் சிறந்த ரைட்டர். இவருடைய எழுத்தையும், ஸ்கிரிப்டையும் வாசிக்க வாசிக்க குஷியாகி விடுவேன்.

ஆனால் இந்த தொடரின் எட்டாவது எபிசோடின் ஸ்கிரிப்ட்டை மட்டும் அவர் எனக்கு அனுப்பவில்லை. நான் ஆர்வமுடன் காத்திருந்தும்… நாளை படப்பிடிப்பு என்றால் அதற்கு முதல் நாள்தான் அதற்கான ஸ்க்ரிப்டை அனுப்புவார்.

‘வதந்தி சீசன்-1’ -ஐவிட இந்த ‘சீசன்-2’-விற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனை இந்தத் தொடர் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்” என்றார்.

நடிகர் யஷ்வந்த் பேசுகையில்,

”என்னைப் போன்ற புதுமுகங்களைகூட தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி மதிப்பு அளித்து பல விசயங்களை சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தனர்.

அவர்களுடைய குழுவில் உள்ள அனைவரும் எனக்கு சிறந்த முறையில் வழிகாட்டினர். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் ஆண்ட்ரூஸ் இந்த ‘வதந்தி’ தொடர் மூலம் எனக்கு வாய்ப்பு மட்டும் தரவில்லை…! வாழ்க்கையையே கொடுத்திருக்கிறார். அவருக்கும் நன்றி.

இந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் பெரிது. ஒரு புதுமுகத்திற்கு இவ்வளவு பெரிய கதாபாத்திரமும், அதற்கான சுதந்திரமும் கொடுப்பார்களா என எனக்குத் தெரியவில்லை. கொடுத்ததற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன் இந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளருக்கும் நன்றி” என்றார்.

நடிகை அபர்ணா தாஸ் பேசுகையில், ”’டாடா’ படத்திற்குப் பிறகு தமிழில் நல்லதொரு கதையில் நடிக்க வேண்டும் என காத்திருந்தேன்.‌ இந்தத் தருணத்தில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இப்படத்தின் கதையை சொன்னார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  

இதுவரை நான் நடித்ததில் இந்த ‘சுமையா’ கதாபாத்திரம்தான் சற்று வித்தியாசமான, சுவாரசியமான, இனிமையான கதாபாத்திரம். இதன் படப்பிடிப்பு அனுபவம் அனைத்தும் மறக்க இயலாது.‌

‘கண்கள் இரண்டால்..’ என்ற பாட்டில் சசிகுமாரின் தலையாட்டலுக்கு எங்கள் கேரளா முழுவதும் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. அதில் நானும் ஒருத்தி.

அப்போதிருந்தே சசிக்குமாருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும் என்ற கனவு இருந்தது. அந்தக் கனவு இதில் நிறைவேறி இருக்கிறது. இதற்காக அவருக்கும் நன்றி.  

வரும் ஆகஸ்ட் ஏழாம் தேதியன்று இந்த ‘வதந்தி சீசன்-2’ தொடர் வெளியாகிறது. முதல் சீசனைவிட கூடுதலாக இந்த இரண்டாவது சீசனுக்கு உங்களுடைய அன்பையும், ஆதரவையும் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

நடிகை அனகா மருதோரா பேசுகையில், ”இந்தத் தொடரில் ‘லீலாவதி’ எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி.

முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தயக்கம் இருந்தது. ஆனால் இயக்குநர் ஆண்ட்ரூஸ் இந்தக் கதாப்பாத்திரத்தை பற்றி விவரித்து என்னை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார்.

அதன் பிறகுதான் இந்த தொடரில் என்னுடைய பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது என்பதை உணர்ந்தேன்.

தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி அவர்களுடன் ஒவ்வொருவரும் இணைந்து பணியாற்ற விரும்புவார்கள். ஏனென்றால் அவர்கள் அலுவலகம் எங்களுடைய இரண்டாவது குடும்பம்போல் இருக்கும்.

‘கருடன்’ படத்திற்குப் பிறகு நான் சசிகுமார் சார் உடன் இணைந்து இரண்டாவது முறையாக பணியாற்றுகிறேன். இதுவே எனக்கு மகிழ்ச்சியை அளித்தது” என்றார்.

இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் பேசுகையில், ”வதந்தி சீசன்-1′, ‘வதந்தி சீசன்-2’.. இதற்கு இசையமைக்கும்போது என்னுடைய பார்வையில் அதன் கீழே இருக்கும் ஒரு டேக்லைன்தான் கவனத்தில் இருந்தது.

சீசன்-1-ல் ‘ஃபேபிள் ஆப் வெலோனி’ என இருக்கும். ‘சீசன் -2’-வில் ‘மிஸ்டரி ஆஃப் மணி’ என இருக்கும். இதைத்தான் நான் ‘வதந்தி’யாக பார்த்தேன்.

‘சீசன்-1’ வேறு கதை. வேறு லேண்ட்ஸ்கேப். அதற்கான இசை வேறானதாக இருக்கும். இந்த ‘சீசன்-2’-வும் வேறு கதை. வேறு லேண்ட்ஸ்கேப். அதனால் இதற்கான இசையும் வேறானதாகவே இருக்கும்.

‘வதந்தி சீசன்-1’, ‘சீசன்-2’ என இரண்டிலும் மனிதர்களுக்கான எமோஷன் கூடுதலாக இருக்கும். அதற்கான இசையைத்தான் நாங்கள் வழங்கி இருக்கிறோம். இது உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

‘வதந்தி சீசன்-1’-ல் பாடல்கள் கிடையாது. ஆனால் இந்த ‘சீசன்-2’-வில் இரண்டு பாடல்கள் இருக்கிறது. இதுவே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கும் காரணமாக இருக்கும்.

இதன் மூலம் மணி ரோமியோ என்ற பாடலாசிரியரை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்” என்றார்.

இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோவில் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் ‘வதந்தி சீசன் 2 : தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ எனும் இணைய தொடர் தமிழில் வெளியாகிறது.

அத்துடன் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டும், ஆங்கிலம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மொழிகளில் சப் டைட்டிலுடன் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

Our Score