கிஷோர் – TTF வாசன் இணையும் ‘ஐபிஎல் (இந்தியன் பீனல் லா)’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது!
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கருணாநிதி இயக்கிய ‘ஐபிஎல் (இந்தியன் பீனல் லா)’ திரைப்படம் நவம்பர் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இதையொட்டி இந்தப் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தில் கிஷோர், TTF வாசன், அபிராமி, குஷிதா, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, ‘ஆடுகளம்’ நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி, ஒளிப்பதிவு S. பிச்சுமணி.

இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட, இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
தயாரிப்பாளர் G.ஆர்.மதன் குமார் பேசுகையில், “இயக்குநர் கருணாநிதி எனது 25 ஆண்டுகள் நெருங்கிய நண்பர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளார். இதில் ஹீரோ வாசன் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படம் தமிழகம் முழுவதும் எங்கள் நிறுவனமே வெளியிடுகிறது” என்றார்.
பாடலாசிரியர் கு.கார்த்திக், மோகன் ராஜ், இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி ஆகியோர் படத்தின் இசை உருவாக்கம் குறித்து பகிர்ந்தனர். சின்மயி, சிவம் மகாதேவன் உள்ளிட்டோர் பாடல்கள் பாடியுள்ளனர்.
இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இடையேயான நட்பும் நம்பிக்கையும் இப்படத்தின் வெற்றிக்கான அடிப்படையாக இருக்கும் என பாராட்டினர்.

நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது, “இந்தப் படத்தின் கதை இரண்டு ஆண்டுகளுக்கு முன் கேட்டேன். சமூக அநீதி குறித்து வலுவான அரசியல் கருத்தை இப்படம் சொல்லுகிறது” என்றார்.
நடிகை குஷிதா பேசும்போது, “எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் கற்றுக்கொண்டு வருகிறேன். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.
நாயகன் TTF வாசன் பேசும்போது, “இது எனது முதல் படம். என்மீது நம்பிக்கை வைத்த இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி. உண்மை சம்பவத்தை தழுவிய சமூகத்தினை பிரதிபலிக்கும் திரைப்படம் இது” என்றார்.
நடிகை அபிராமி பேசும்போது, “நாளிதழ் செய்தியை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படம் குடும்பம், காதல், சஸ்பென்ஸ் என அனைத்தையும் உள்ளடக்கியது” என்றார்.
நடிகர் கிஷோர் பேசும்போது, “சமூகத்தின் குரலாக ஒலிக்கும் படமாக ‘ஐபிஎல்’ இருக்கும். மக்களின் ஆதரவைப் பெறும் என்று நம்புகிறேன்” என்றார்.
இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “தயாரிப்பாளர் தனது நண்பரான கருணாநிதியை இயக்குநராக அறிமுகப்படுத்தியிருப்பது மனதை நெகிழச் செய்கிறது. இப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்” என பாராட்டினார்.
இயக்குநர் கருணாநிதி பேசும்போது, “அதிகாரமும் பணமும் மிக்கவர்கள் தங்களின் குற்றங்களை சாதாரண மக்கள்மேல் திணிக்கும் சமூக நிஜத்தை படம் எடுத்துக் காட்டுகிறது. மக்கள் இதனை திரையரங்குகளில் அனுபவிக்க வேண்டும்” என்றார்.
இத்திரைப்படம் வரும் நவம்பர் 28-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.









