இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் S.S.ராஜமௌலி இயக்கியிருக்கும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’
300 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்தை DVV எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
ஆந்திராவின் இரண்டு புகழ் பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீத்தாராம், கோமரம் பீம்மா இருவரின் வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டு 1920-களின் பின்னணியில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இதில் அல்லூரி சீதாராமாக நடிகர் ராம் சரணும், கோமரம் பீம்மாக நடிகர் ஜுனியர் என்.டி.ஆரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நாயகிகளாக பாலிவுட் நடிகை அலியா பட், இங்கிலாந்து நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் இருவரும் நடித்துள்ளனர்.
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகளும் இந்தத் திரைப்படம் உருவாகியிருக்கிறது.
வரும் நவராத்திரி பண்டிகை விடுமுறை தினத்தில் இத்திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இப்போது இந்தப் படத்தின் ஒரு சிறப்பம்சமாக அலியா பட் தமிழ், தெலுங்கு பதிப்புகளில் ஒரு பாடலை தன் சொந்தக் குரலில் பாடியுள்ளாராம்.
இது எல்லாவற்றையும் தாண்டி இதுவரையில் எந்தவொரு இந்தியத் திரைப்படமும் செய்யாத சாதனையாக இதன் தென்னிந்திய மொழிகள் அனைத்துக்குமான தியேட்டர்களில் திரையிடுவதற்கான உரிமத் தொகை மிகப் பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளதாகத் தெரிகிறது. அந்தத் தொகை 348 கோடி என்கிறது தெலுங்கு படவுலகம்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் திரையரங்கு உரிமை 230 கோடிகள்.
தமிழக திரையரங்கு உரிமை 50 கோடிகள்.
கர்நாடகா திரையரங்கு உரிமை 43 கோடிகள்.
கேரளா திரையரங்கு உரிமை 10 கோடிகள்.
இந்தி திரையரங்கு உரிமை 140 கோடிகள்.
வெளிநாட்டு உரிமை 77 கோடிகள்.
ஆக மொத்தத்தில், தியேட்டர்களில் திரையிடுவதற்கான உரிமத் தொகை மூலமாக இந்தப் படத்திற்கு 550 கோடிகள் கிடைத்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நிச்சயமாக இது மிகப் பெரிய சாதனைதான்.
முன்னதாக ‘பாகுபலி-2’ திரைப்படம்தான் தென்னிந்திய சினிமாக்களில் மிக அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு மிக அதிகமான வசூலையும் பெற்ற திரைப்படம்.
இந்த ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் பட்ஜெட் 400 கோடிகள் என்கிறார்கள். ஆனாலும், மொத்தம் 850 கோடிகளுக்கு ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் மொத்த வியாபாரம் முடிந்திருப்பதாக தெலுங்கு திரையுலகத்தில் பட்டியலிட்டு சொல்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு உலக அளவில் திரையரங்கு உரிமையின் வழியாகவே 550 கோடிகள் வரும் என்கிறார்கள். இன்னொரு முக்கியமான வருவாய் சேட்டிலைட், டிஜிட்டல் உரிமை. ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் அனைத்து மொழிகளுக்குமான டிஜிட்டல், சேட்டிலைட் உரிமைகள் 300 கோடிகளுக்கும் மேல் விலை பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த உத்தேச கணக்கை வைத்துப் பார்த்தால், இந்த ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பேயே 850 முதல் 875 கோடிகள்வரை நிச்சயம் சம்பாதிக்கும் என்கிறார்கள். இது நடந்தால் பட வெளியீட்டுக்கு முன்பாகவே இந்தப் படத்தின் மூலமாக 450 முதல் 475 கோடிவரை லாபமாகவே தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது இந்தப் படத்தின் வியாபாரம் அதைத் தாண்டியும் நடந்திருக்கிறது என்றால்.. இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் நிச்சயமாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலிதான்.