மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் 1988-ல் வெளியான ‘ஒரு சி.பி.ஐ. டைரி குறிப்பு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.
இயக்குநர் கே.மது இயக்கியிருந்த இந்தத் துப்பறியும் திகில் கதையம்சம் கொண்ட படம் அனைத்து மொழி திரைப்படத் துறையினரையும் திரும்பி பார்க்க வைத்தது.
இதே திரைப்படம் பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. தமிழிலும் இத்திரைப்படம் மிகப் பெரிய வசூலைப் பெற்றிருந்தது.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் தொடர்ச்சியாக இதுவரையிலும் 4 பாகங்கள் வெளிவந்துள்ளன.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘ஜாக்ரதா’ என்ற பெயரில் 1989-ல் வெளியானது. 3-ம் பாகம் ‘சேதுராம ஐயர் சி.பி.ஐ.’ என்ற பெயரில் 2004-ல் ரிலீசானது. 4-ம் பாகமான ‘நேரரியான் சி.பி.ஐ.’ 2005-ல் வெளியானது.
தற்போது 15 வருடங்களுக்கு பிறகு இந்த படங்களின் தொடர்ச்சியாக சி.பி.ஐ 5-ம் பாகமும் தயாராக உள்ளது.
இந்த படத்தில் மம்முட்டி, முகேஷ் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர். ரெஞ்சி பணிக்கர், சவுபின் ஷாகிர், ஆஷா சரத், சாய்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்பை கொரோனா பரவல் முடிந்த பிறகு ஆகஸ்டு மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.