full screen background image

நடிகர் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார் இயக்குநர் லிங்குசாமி..!

நடிகர் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார் இயக்குநர் லிங்குசாமி..!

நடிகர் கமல்ஹாசன் மீது இயக்குநர் லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குநராக முன்னேறிய இயக்குநர் லிங்குசாமி சொந்தமாக திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்தார்.

அந்த நிறுவனத்தின் சார்பில் பையா, வழக்கு எண் 18 / 9, கும்கி, கோலிசோடா, சதுரங்க வேட்டை, ரஜினி முருகன், அஞ்சான் போன்ற திரைப்படங்களை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் 2015-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உத்தம வில்லன் படத்தை தயாரித்ததன் மூலம் பெரும் பொருளாதார நஷ்டத்தை எதிர்கொண்டது.

அந்த நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் செய்து தருவதாக வாக்களித்த கடந்த 9 ஆண்டுகளாக அதைச் செய்யாமல் தவிர்த்து வருகிறார்.

இதனால் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு கமல்ஹாசனுக்கு நல்ல புத்தி சொல்லி அவர் வாக்குறுதியளித்தபடி தங்களுக்கொரு படத்தைத் தயாரித்து அளிக்கும்படி கேட்டு  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுகியிருக்கிறது திருப்பதி பிரதர்ஸ்.

இது தொடர்பாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு  கடிதம் ஒன்றை இன்றைக்கு எழுதி அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில்,

“எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கமல்ஹாசனை வைத்து 2013-ம் ஆண்டு ஒரு தமிழ் திரைப்படம் தயாரிப்பதற்காக அணுகினோம். கமல்ஹாசன் சம்மதித்து எங்களிடம் ஒரு கதையை கூறினார்.

அந்த கதை எங்களுக்கு மிகவும் பிடித்திருந்த காரணத்தால் அவருடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் எங்கள் நிறுவனமான திருப்பதி பிரதர்ஸுக்கு முதல் பிரதி அடிப்படையில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் படத்தை செய்து தருவதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

மேலும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டதிற்கிணங்க படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ.10 கோடிக்கும் மற்றும் வட இந்தியா உரிமை ரூ.5 கோடிக்கும் கமல்ஹாசனே எடுத்துக் கொண்டதால் மீதமுள்ள ரூ.35 கோடிக்கு (வெளிநாடு மற்றும் வட இந்தியா உரிமை இல்லாமல்) ஒப்பந்தம் இருவரிடையே கையெழுத்தானது. ஒப்பந்தம் கையொப்பமான அன்றே ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு முன் பணமாக ரூ.15 கோடி தரப்பட்டது.

முன் பணம் தரப்பட்ட ஒரு வாரத்தில் கமல்ஹாசன் எங்களை அழைத்து முதலில் கூறிய கதை செய்யவில்லை என்றும் அதற்குப் பதிலாக இப்போது வேறு ஒரு கதையை கூறுவதாகவும், இக்கதையை வேறொரு இயக்குனர் இயக்குவதாகவும் கூறினார். அந்தக் கதை எங்களுக்கு பிடிக்கவில்லை.

எனவே நாங்கள் அந்தக் காலக்கட்டத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த மலையாள படமான “திரிஷ்யம்” படத்தினை வெளியான மூன்றாவது நாளில் கமல்ஹாசனுக்கு திரையிட்டுக் காண்பித்து அந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்து, நடித்து, தயாரித்து தருமாறு கேட்டுக் கொண்டோம்.

அதற்கு என்னுடைய சகோதரர் இயக்குநர் லிங்குசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “ஏன்.. என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?” என்றும் மேலும் “அந்த ‘திரிஷ்யம்’ கதையைப் படமாக்க தனக்கு விருப்பமில்லை…” என்றும் கூறிவிட்டார். இதனால், நாங்களும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி கொண்டிருந்தோம்.

ஓரிரு வாரங்கள் கழித்து கமல்ஹாசன் “எனக்கு புடிக்கவில்லை” என்று எங்களிடம் மறுத்த அதே ‘திரிஷ்யம்’ படத்தின் கதையில் நடிக்க வேறொரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதனை அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளான நாங்கள் கமல்ஹாசனை அணுகி “என்ன இப்படி செய்து விட்டீர்களே..?” என்று கேட்டோம். இதை சமாளிக்கும்விதமாக மீண்டும் ஒரு கதையை எங்களிடம் கூறினார். அந்த கதையும் எங்களுக்கு விருப்பமில்லாததால், அவர் முதலில் கூறிய கதையையே எங்களுக்கு செய்து தருமாறு மீண்டும் அவரிடம் கோரிக்கை வைத்தோம்.

ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டு இந்தப் படம் என் மனதிற்கு நெருக்கமானதென்றும் அதற்கு ‘உத்தமவில்லன் என்று தலைப்பு வைத்து அதை தன் நண்பர் ரமேஷ் அரவிந்த் மூலம் இயக்கி தருவதாக தெரிவித்தார். “அதில் ஏதாவது உங்களுக்கு தவறு நடக்கும்பட்சத்தில் படத்தின் நஷ்டத்தை நான் முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன்” என்ற உறுதியும் அளித்தார்.

அதை நம்பி நாங்களும் அந்த படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டு மீதி தொகையான ரூ.20 கோடியை படத்தின் ஒவ்வொரு ஷூட்டிங் அட்டவணைப்படி எந்தவித தாமதமின்றி சரியான நேரத்தில் வங்கி மூலமாக பணத்தை கொடுத்து முடித்துவிட்டோம்.

‘உத்தமவில்லன்’ படம் பாதி தயாரிப்பில் இருந்தபோதுதான் கமல்ஹாசன் மற்றும் அவருடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு தமிழ்நாடு திரைப்பட வினியாகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு தடை (ரெட் கார்டு) விதித்திருப்பது தெரிய வந்தது. இதைக் கேட்டு மிகவும் அதிர்ந்துவிட்டோம்.

இந்தப் படத்தை EROS INTERNATIONAL என்கிற நிறுவனம் மினிமம் கேரண்டி (MG) முறையில் எங்களிடமிருந்து வாங்கியிருந்தது. இந்தத் தடையை அறிந்த EROS INTERNATIONAL நிறுவனம் (MG) முறையில் வாங்கிய உரிமையை ரத்து செய்துவிட்டு முற்றிலுமாக இப்படத்திலிருந்து விலகியது எங்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் அவர்கள் கொடுத்த முன் பணத்தை வட்டியுடன் கூடிய கடனாக மாற்றிக் கொண்டது.

இந்நிலையில் இப்பட திரையரங்கு வெளியீட்டிற்கு முன் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் கமல்ஹாசன் மற்றும் அவருடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு விதித்திருந்த தடையை எங்களின் பெரு முயற்சி மற்றும் பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் தடையை நீக்கினோம்.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ் மொழி இசை வெளியீட்டை மிகச் சிறப்பான முறையில் சென்னையிலும் மற்றும் தெலுங்கு இசை வெளியீட்டை ஐதராபாத்திலும் நாங்கள் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக நடத்தினோம்.

கமல்ஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தின் முதல் பிரதியை எங்களுக்குப் போட்டுக் காண்பித்தபோது எனக்கு(N.சுபாஷ்சந்திரபோஸ்) இந்தப் படம் முற்றிலுமாக பிடிக்கவில்லை. ஆனால் என்னுடைய சகோதரர் இயக்குனர் லிங்குசாமி அதில் சில காட்சிகளை எடிட் செய்தும், மாற்றியும் பிறகு படத்தை வெளியிடலாம் என்ற கருத்தை அவரிடம் தெரிவித்தார். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டார். ஆனால் சில நாட்கள் கழித்து நாங்கள் கூறிய காட்சிகளை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே படத்தை வெளியிடலாமென்று கூறிவிட்டார்.

நாங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா முழுவதும் வெளியிட முயற்சி எடுத்தபோது எவரும் இந்தப் படத்தை வெளியிட முன் வரவில்லை. இதனால் ஏற்பட்ட பண நெருக்கடியால் இத்திரைப்படம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியான மே 1, 2015 அன்று ரிலீஸ் ஆகவில்லை.

இங்கு நடந்து கொண்டிருந்த அனைத்து விஷயங்களையும் நன்கு அறிந்திருந்த கமல்ஹாசன் அதை பொருட்படுத்தாமல் தன் வசம் இருந்த வெளிநாட்டு உரிமையை வைத்து மே 1, 2015 அன்று வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்துவிட்டார். வெளிநாட்டில் இருந்து வந்த அந்தப் படத்தின் விமர்சனங்களால் இந்தப் படத்தை டிஸ்ட்ரிபியூஷன் முறைகளில்கூட வெளியிட யாரும் முன் வரவில்லை.

இந்நிலையில் நாங்கள் கமல்ஹாசனை தொடர்பு கொண்டு இந்தப் படத்தின் வெளிநாட்டு ரிலீசால் எங்களுக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையை விவரித்தோம்.

கமல்ஹாசன் முன்பேயே அளித்த உறுதியின்படி அவரின் சகோதரர் அமரர் சந்திரஹாசன் மற்றும் அவருடைய முன்னாள் & இந்நாள் மேலாளர் மூர்த்தி மூலம் அன்றைய தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைப்புலி தாணு உள்ளிட்ட திரை பிரபலங்கள் முன்னிலையில் எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக ரூ.30 கோடியில் (எல்லா வரிகளும் உட்பட) மீண்டும் ஒரு படம் செய்து தருவதாக உத்திரவாத கடிதமும், அந்தப் படத்தை அவருடைய நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ‘ஓர் இரவு(தூங்காவனம்)’ படத்திற்கு அடுத்து, உடனடியாக தயாரித்து நடித்து தருவதாக உத்திரவாத கடிதமும் அளித்தார்.

இதை நம்பி நாங்கள் எங்கள் சொந்த செலவில் பெரும் தொகையை கடன் வாங்கி “உத்தமவில்லன்” படத்தை மே 2, 2015 அன்று வெளியிட்டோம். இத்திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய தோல்வியடைந்து எங்கள் நிறுவனத்திற்கு பொருளாதார ரீதியில் மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சில மாதங்கள் கழித்து ‘ஓர் இரவு(தூங்காவனம்)’ படத்தின் ஷூட்டிங் பாதி நிலையை தாண்டிய நிலையில், கமல்ஹாசனின் தொலைபேசி அழைப்பின் பேரில் அவரை நேரில் சந்தித்தோம்.

அப்பொழுது, “நான் உங்களுக்கு ஒரு படத்தினை 30 கோடி ரூபாயில் செய்து தருவதாக உத்திரவாதம் கொடுத்துள்ளேன். அதற்கு ஏன் நீங்கள் இப்பொழுது ஷூட்டிங் நடைபெற்று வரும் ஓர் இரவு(தூங்காவனம்) படத்தையே எடுத்துக் கொள்ளக் கூடாது..?” என்று எங்களிடம் கேட்டார். அதற்கு நாங்கள் “இந்தப் படம் எங்களுக்கு வேண்டாம்…” என்று கூறிவிட்டு, எங்களுக்கு பிடித்த கதையில் ஒரு படத்தை செய்து தருமாறு மறுபடியும் கூறிவிட்டு வந்தோம்.

இதனால் அவர்கள் அளித்த உத்திரவாத கடிதத்தின் அடிப்படையில் பல முறை கமல்ஹாசனை நேரிலும் மற்றும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டோம். ஒன்பது வருடங்கள் கழிந்தும் இதுவரை எங்களுக்கு படம் செய்து தருவதாக கூறியவர் செய்து தரவில்லை. இப்பட வெளியீட்டிற்கு கடன் கொடுத்த அனைவரும் எங்களுக்கு மிகவும் நெருக்கடி கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே, கமல்ஹாசன் அளித்த உத்திரவாத கடிதத்தின்படி எங்களுக்கு விருப்பமான கதையில் நடித்து தயாரித்து தருவதற்கு கால்ஷீட் பெற்று தரும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Our Score