மிகப் பெரும் எதிர்பார்ப்புக்குப் பிறகு, ‘மேஸ்ட்ரோ’, ‘இசை ஞானி’ இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘இளையராஜா’ படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா, சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று காலை நடைபெற்றது.
நடிகர் தனுஷ் இளையராஜாவாக தோற்றமளிக்கும் அழகான போஸ்டரை வெளியிட்டு, உலக நாயகன் கமல்ஹாசன் இப்படத்தினை துவக்கி வைத்து, வாழ்த்து தெரிவித்தார். கேப்டன் மில்லர் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தினை இயக்குகிறார்.
கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன் மற்றும் மெர்குரி மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தை வழங்குகின்றன. ஸ்ரீராம் பக்திசரண் சி.கே. பத்ம குமார், வருண் மாத்தூர், இளம்பரிதி கஜேந்திரன் மற்றும் சௌர்ப் மிஸ்ரா ஆகியோர் இப்படத்தினை தயாரிக்கின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பு செய்கிறார்.
இந்த நிகழ்வில் ‘இசை ஞானி’ இளையராஜா, நடிகர் கமல்ஹாசன், நடிகர் தனுஷ், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, இயக்குநர் கங்கை அமரன், இயக்குநர்கள் வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா, சந்தானபாரதி ஆகியோருடன் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவினில் நடிகர் தனுஷ் பேசும்போது “இது எனக்கு உண்மையிலேயே நிறைவான தருணம். எனது சிறுவயதிலிருந்தே, ‘மேஸ்ட்ரோ’ இளையராஜா சாரின் மயக்கும் மெல்லிசைக்கு நான் ரசிகன்.
நம் எண்ணங்களே நம்மை வடிவமைக்கப்படுகின்றன என்று கூறுவார்கள். அதுதான் உண்மை. நாம் முழு மனதுடன் நம் கனவை நோக்கி நம்மை அர்ப்பணிக்கும்போது, அவை நிறைவேறும். பலர் தங்கள் மன அமைதிக்கு இளையராஜாவின் பாடல்களை நாடுகிறார்கள். பலர் உறக்கத்திற்காக அவரது பாடல்களில் மூழ்குவார்கள். நான் என் பல இரவுகளை அவரது இசையுடன் கழித்துள்ளேன்.
எனது திரை வாழ்க்கையில் ஆரம்பம் முதல் இப்போதுவரையிலும், ஒரு நடிகனாக உண்மையிலேயே சிறப்பான நடிப்பை வழங்க வேண்டிய தருணத்தில் எல்லாம், எனது இயர்போன்கள் மூலம் அவரது இசையமைப்பில் மூழ்கி, அதன் மூலமே என் நடிப்பை வெளிப்படுத்துவேன். இன்றுவரை எனக்கு நடிப்பு சொல்லித் தருவது அவரது இசைதான்.
வெள்ளித்திரையில் அவரது பாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. இப்போது அது நடப்பது மிகுந்த மகிழ்ச்சி. இப்படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன்.
இளையராஜா சாரின் உண்மையான அபிமானியான மாண்புமிகு கமல்ஹாசன் சாரின் வருகைக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அருண் மாதேஸ்வரன் ஒரு மகத்தான பொறுப்பின் கனத்தை உணர்கிறார் என்பது புரிகிறது. ஆனால் இந்த திரைப்படத்தை மிக மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் உருவாக்கலாம் என அவரை ஊக்குவிக்கிறேன். ஏனெனில் இது கலையின் மீதான காதல் இளையராஜாவின் மீதான காதல். அனைவருக்கும் என் நன்றிகள்..” என்றார்.
‘மேஸ்ட்ரோ’ இளையராஜாவுடன் பல தசாப்தங்களாக தனது நட்பை தொடர்ந்து வரும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன், ஒட்டு மொத்த குழுவிற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அவர் பேசும்போது, “இந்தப் படத்தை உயிர்ப்பிப்பதில் மகத்தான பொறுப்பு மற்றும் அழுத்தத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உணரக் கூடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. பல விருதுகளைப் பெற்ற ‘மேஸ்ட்ரோ’ இளையராஜா பற்றிய அவரது தனித்துவமான கண்ணோட்டத்தை அவர் ரசித்து முன் வைக்கலாம் என்று நான் பரிந்துரைக்கிறேன்.
இந்த ஒரு ஐகானின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒரு திரைப்படம். பல பாகங்களைக் கொண்டிருக்கலாம். மக்களின் வாழ்வோடு இணைந்திட்ட அவரது இசை தரும் தாக்கம் தனித்துவமானது. எனவே, இசைத் துறைக்கு பெருமை சேர்க்கும் இந்த இசைப் பேரறிஞரைப் பற்றிய தனது தனிப்பட்ட பார்வையை அருண் முன் வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
‘குணா’ படத்தின் “கண்மணி அன்போடு காதலன்” பாடல் எங்கள் இருவருக்கும் இடையிலான காதல் மற்றும் உணர்ச்சிகளின் அழகான பரிமாற்றம். இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை அழகாகவும் நேர்த்தியாகவும் சித்தரிக்க நடிகர் தனுஷுக்கு எனது வாழ்த்துகள்..” என்றார்.
‘இசை ஞானி’ இளையராஜாவின் கையால் எழுதப்பட்ட இசைக் குறிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட ரெட்ரோ போஸ்டரை, உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டது இத்திரைப்படத்தின் துவக்க விழாவில் ஒரு சிறப்புத் தருணமாக அமைந்தது.