‘யோகி & பார்ட்னர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுபா தம்பி பிள்ளை தயாரித்துள்ள படம் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’.
புதுமுகமான அசார் நாயகனாகவும், சஞ்சிதா ஷெட்டி நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், யோகிபாபு, டாக்டர் ஷர்மிளா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – வம்சி தரன் முகுந்தன், படத் தொகுப்பு – சி.எஸ்.பிரேம், பிரபல பெண் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படம் வரும் பிப்ரவரி 23-ம் தேதி வெளியாகிறது. இதை முன்னிட்டு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று பகல் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரகுமான் கலந்து கொண்டு படக் குழுவை வாழ்த்தி பேசினார்.
நடிகர் ரகுமான் பேசும்போது, “20 வருடங்களுக்கும் மேலாக தயாரிப்பாளர் யோகியும், சுபாவும் எனக்கு ரொம்ப மிக நெருக்கமான நண்பர்கள். என்னை பார்க்கும்போதெல்லாம் ‘ஒரு படம் பண்ணனும்’ என்று சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நான்தான் ‘சினிமா ரிஸ்க்கான தொழில். உங்களுக்கு வேண்டாம்’ன்னு சொல்லிக்கிட்டே இருந்தேன்.
பின்னர் ஒரு நாள் ரெஹானா மேடத்தின் வழிகாட்டுதலில் படத்தை துவங்கியதாக சொன்னார்கள். கதையை நானும் கேட்டேன். எனக்கும் பிடித்திருந்தது. படக் குழுவினரை பார்த்தபோது எனக்கும் திருப்தியாக இருந்தது. பாடல்களும், ஒரு சில காட்சிகளையும் பார்த்தேன், சிறப்பாக வந்திருக்கிறது. எல்லோரையும் ஈர்க்கும் தலைப்பாகவும் அமைந்துள்ளது. ரெஹானாவின் இசை படத்துக்கு பக்க பலமாக அமைந்துள்ளது. ‘துருவங்கள் 16’ படத்தை போலவே இதுவும் முழுக்க புதுமுகங்கள் நடித்த படமாக இருந்தாலும் அதே போலவே பெரிய வெற்றியை பெறும்..” என்று நம்பிக்கை தெரிவித்தார் நடிகர் ரகுமான்.
நாயகன் அசார் பேசும்போது, “படத்தின் டிரெயிலர் மாதிரியே மொத்த படமும் ரசிகர்களை சிரிக்க வைக்கும். ரெஹானா மேடம் படத்துக்கு பெரிய பில்லர் போல இருந்தார்கள். தயாரிப்பாளர்கள் யோகி, சுபா இருவரும் நினைத்திருந்தால் பிரபலமான நடிகர்களையே நடிக்க வைத்திருக்கலாம், ஆனால் எங்களை நம்பி படத்தை தயாரித்திருக்கிறார்கள். புதுமுகமான எனக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்க ஒப்புக் கொண்டது பெரிய விஷயம். அவருக்கு எனது நன்றிகள்..” என்றார்.
நாயகி சஞ்சிதா ஷெட்டி பேசும்போது, “என் முதல் படத்திலிருந்தே மீடியா எனக்கு பெரும் ஆதரவை கொடுத்து வருகிறது. ஒவ்வொரு படத்தையும் முதல் படமாக நினைத்துதான் நான் நடித்து வருகிறேன். அசார் ரொம்ப திறமையான நடிகர். ரெஹானா மேடம் தன் இசையில் ‘வச்சி செய்றேன்’, ‘அம்மா’ என்ற சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறார். ஒரு பெண் தயாரிப்பாளரின் படத்தில் நடித்தது புது அனுபவம். இந்த தலைப்பு பலரையும் படத்தை பற்றி பேச வைத்துள்ளது…” என்றார்.
படத்தின் இணை தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானா பேசும்போது, “நான் கனடா சென்றிருந்தபோது சுபா மேடத்தை அங்கே சந்தித்தேன். அப்போ நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்னு சொன்னாங்க சுபா. உடனேயே நான் ஒரு பட்ஜெட் கொடுத்தேன். சென்னை வந்தப்புறமும் அவங்க கேட்டுட்டே இருந்தாங்க.
நானும் நிறைய பேரை பார்த்தோம். அதில் கிடைத்தவர்தான் விக்னேஷ் கார்த்திக். காமெடி படம்தான் பண்ணலாம்னுதான் முதல்ல நினைச்சிருந்தேன், அவர் சொன்ன கதையும் ரொம்ப நல்லாவே இருந்தது. அசார் எனக்கு முன்னாடியே அறிமுகமானவன், விக்னேஷ் கார்த்திக்கிட்ட சொன்னப்போ அவரும் அசார் என் நண்பன்தான், எனக்கும் ஓகேன்னு சொன்னார். சஞ்சிதா ஷெட்டி, சிங்கப்பூர் தீபன், ஈடன், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிச்சிருக்காங்க. படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லை…” என்றார்.
தயாரிப்பாளர் சுபா தம்பி பிள்ளை பேசும்போது, “விக்னேஷ் கார்த்திக், அசார், சஞ்சிதா ஷெட்டி மூணு பேரும் என் பிள்ளைகள் மாதிரி. முதல் தடவை விக்னேஷ் கார்த்திக்கை பார்த்தப்போ ரொம்ப சின்ன பையனா இருக்காரே, இவர் எப்படி படத்தை இயக்குவார்னு சந்தேகமா இருந்துச்சி. முதல் நாள் ஷூட்டிங்கிலேயே எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். நாயகன் அசாரை மாத்திட்டு வேற ஹீரோ புக் பண்ண நினைச்சேன், ஆனால் அசார் மிகவும் திறமையானவர் என்பதை நிரூபித்தார். ‘சூது கவ்வும்’ நாயகி சஞ்சிதா ஷெட்டிதான் நாயகின்னு சொன்னதும் உடனே புக் பண்ண சொல்லிட்டேன்…” என்றார்.
“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்னு சொல்லுவாங்க. இந்தப் படத்தோட டிரெயிலரே படத்தை பத்தி சொல்லும். படத்தில் ஒளிப்பதிவு, படத் தொகுப்பு, இசை என எல்லாமே சிறப்பாகவே அமைஞ்சிருக்கு. அசார் ரொம்ப இயல்பான நடிகர். டிரெயிலர், பாடல்கள் பார்த்துட்டு சிம்பு சாரும், சந்தானம் சாரும் ஃபோன் பண்ணி அசாரை வாழ்த்துனாங்க. அவர்களுக்கு என் நன்றிகள்” என்றார் சிங்கப்பூர் தீபன்.
படத்தின் இயக்குநரான விக்னேஷ் கார்த்திக் பேசும்போது, “இப்போதெல்லாம் சேஃபா ஒரு காமெடி படம் பண்ணலாம்னு தயாரிப்பாளர்கள் நினைச்சிட்டிருக்கும்போது, இப்படியொரு வித்தியாசமான படத்தை பண்ணலாம்னு முன் வந்த தயாரிப்பாளர்களுக்கும், ரெஹானா மேடத்திற்கும் நன்றி.
கல்லூரிக்கு போகும் ஒரு நாயகனா அசார் கிடைச்சிருக்காரு. சஞ்சிதா ஷெட்டி ரொம்ப சின்சியரான நடிகை, ஒரு நாள்கூட அவரால் படம் தாமதமானது கிடையாது. சிங்கப்பூர் தீபனுக்கு ஏன் பெரிய பிரேக் கிடைக்கலனு தெரில. இந்த படத்துல அவருக்கு நல்ல பேரு கிடைக்கும். கவிராஜ் என்ற உதவி இயக்குநர் சொன்ன தலைப்புதான் இந்த ‘ஏண்டா தலைல எண்ண வைக்கல’ தலைப்பு. பல பேருக்கு படத்தை கொண்டு போய் சேர்த்ததே இந்த தலைப்புதான்னு சொல்லலாம்…” என்றார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒளிப்பதிவாளர் வம்சி தரன் முகுந்தன், எடிட்டர் சி.எஸ்.பிரேம், தயாரிப்பாளர் யோகி தம்பி பிள்ளை, ஸ்டுடியோ 9 விஜித் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.