படத்தின் இயக்குநருக்கே தெரியாமல் படத்தின் டீஸர் வெளியாகிவிட்டதாம். இப்படியொரு சிக்கல் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்திற்கு ஏற்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில், வெங்கட கிருஷ்ண ரோக்நாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்.’
இந்தப் படத்தின் டீசர் கடந்த மார்ச் 4-ம் தேதி வெளியானது. டீஸர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இயக்குநரான வெங்கட கிருஷ்ண ரோக்நாத், “எனக்கு தெரியாமலேயே இந்த டீசர் வெளிவந்துவிட்டது. இது குறித்து தயாரிப்பாளரிடம் விளக்கம் கேட்டுள்ளேன்…” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எழுதியிருக்கிறார். அதில், “மன்னிக்கவும்… இதுவரை நான் இயக்கிய விஜய் சேதுபதி நடித்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படம் பற்றிய அத்தனை அப்டேட்சையும் நான் தவறாமல் இங்கே பதிவிட்டிருக்கிறேன்.
இந்த முறை டீசர் வெளிவருவது சம்மந்தமான போஸ்டரையோ வெளிவந்த டீசரையோ நான் எனது முக நூல் பக்கத்தில் வெளியிடவில்லை. அதற்கு மிக முக்கியமான காரணம் நான் இயக்கிய படமான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்துக்கான டீசர் வெளி வருகிறது என்பதே எனக்கு தெரியாது.
கூடவே மிக முக்கியமான தகவல். அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. நான் அந்த டீசர் வெளியாகி 45 நிமிடங்கள் கழித்தே பார்த்தேன். திரும்பவும் மன்னிக்கவும்.
இப்போது வேறு வழியில்லாமல் அந்த டீசரைப் பற்றி பேசாமல் மௌனமாக கடந்து போகிறேன். உண்மையில் இந்த படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்டக் கூடிய வகையில் நான் உருவாக்கிய டீசர் இப்போதும் என்னிடம்தான் இருக்கிறது.
டப்பிங் செய்யப்படாமல் ‘ஆர்.ஆர்.’ செய்யப்படாமல் ’டி.ஐ.’ செய்யப்படாமல் அப்படியே ‘ரா’வாக இருக்கிறது. இந்தக் குளறுபடிக்கான காரணம் பற்றி தயாரிப்பாளர் தரப்பிடம் கேள்வி கேட்டிருக்கிறேன். தக்க பதில் வந்தால் அதை என் முக நூல் நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்…” என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.