‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1972-ம் ஆண்டு தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை துவக்கிய பின்பு இப்படம், அக்கட்சியின் கொடியுடன் வெளியானது.
இப்படத்தில், எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். விஞ்ஞானியான முருகன், மின்னலை பிடித்து, அதை ஆக்கபூர்வப் பணிக்கு பயன்படுத்த நினைப்பார். அத்திட்டத்தின் ‘பார்முலா’வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும். விஞ்ஞானி முருகனின் தம்பியும், புலனாய்வுத் துறை அதிகாரியுமான ராஜூ, எதிரிகளின் இந்த சதித் திட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
முருகன், ராஜூ என இரண்டு வேடங்களிலும் எம்.ஜி.ஆர். நடித்திருப்பார். லதா, மஞ்சுளா, சந்திரகலா என, மூன்று கதாநாயகியர். நாடு, நாடாக பயணிக்கும் சர்வதேச கதை, அதை திறமையாக கையாண்டு இயக்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.
‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில், ‘கவியரசு’ கண்ணதாசன், கவிஞர்கள் வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் இந்தப் படத்தின் பாடல்களை எழுதினர். ‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘நிலவு ஒரு பெண்ணாகி’, ‘சிரித்து வாழ வேண்டும்’ உட்பட இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வெற்றியைப் பெற்றன. இன்றைக்கும் மறக்க முடியாத பாடல்களாக அவை அமைந்துள்ளன.
இந்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை பார்த்தால், எம்.ஜி.ஆர், எவ்வளவு பெரிய தொழில் நுட்பக் கலைஞர் என்பது அனைவருக்கும் புரியும்.
இப்படம் தற்போது புதிய டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் டால்பி அட்மாஸ் சவுண்டுடன் தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.
ரிஷி மூவிஸ் சார்பில் சாய் நாகராஜன் வழங்க, உலகம் முழுவதும் சரோஜா பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது. தமிழகம் முழுவதும் 7 ஜி பிலிம்ஸ் மற்றும் சரோஜா பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன.