Sky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், பெண் இயக்குநரான ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.
‘கபாலி’, ‘பரியேறும் பெருமாள்’ படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களிலும், ‘காலேஜ் ரோட்’ படத்தில் நாயகனாகவும் நடித்த லிங்கேஷ், இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த பிரிடிஷ் நடிகை லியா நாயகியாக நடித்துள்ளார். நடிகை திவ்யா இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார். அறிமுக நடிகர் காட்பாடி ராஜன் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் மதுசூதனன், மாறன், கஞ்சா கருப்பு, சித்தா தர்ஷன், செந்தமிழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இறுதிக்கட்ட தயாரிப்பிலுள்ள இப்படத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.
திரைத்துறை மீதான தீராக் காதலிலும், ஆர்வத்திலும், 63 வயதில் தனது முதல் படமாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஜெயலட்சுமி. இது அவரது முதல் திரைப்படம் என்றாலும் திரைத்துறைக்கு பழமையானவர். மீனவ மக்கள் வாழ்க்கை பின்னணியில் ஒரு மென்மையான, முக்கோண காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
லண்டனிலிருந்து தமிழக கலாச்சாரத்தை ஆய்வு செய்ய, இந்தியா வருகிறார் நாயகி லியா. மீனவ இளைஞனான லிங்கேஷ் மீது அவருக்கு காதல் வருகிறது. ஆனால் லிங்கேஷுக்கு அவரது மாமன் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தடைகளைத் தாண்டி அவர்கள் காதல் நிறைவேறியதா?, காதலர்கள் சேர்ந்தார்களா? என்பது தான் இப்படத்தின் கதை.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிந்த நிலையில் படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகுமென படக் குழு அறிவித்துள்ளது.