S.S.B.டாக்கீஸ் தயாரிப்பில் செல்வகுமார் செல்லப்பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வார்டு 126’.
தனி மனித ஒழுக்கத்தை வலியுறுத்தும்விதமாக ரொமான்டிக் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் ஆக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் ஷ்ரத்தா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், ஸ்ருதி ராமகிருஷ்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, நாயகர்களாக மைக்கேல் தங்கதுரை மற்றும் ஜிஷ்ணு மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சோனியா அகர்வால் மற்றும் ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – S.S.B.டாக்கீஸ், வெளியீடு – Action Reaction Films ஜெனீஷ், இயக்கம் – செல்வகுமார் செல்லப்பாண்டியன், இசை – வருண் சுனில், ஒளிப்பதிவு – எஸ்.கே.சுரேஷ்குமார், படத் தொகுப்பு – தியாகு, கலை இயக்கம் – பழனிவேல், சண்டை பயிற்சி இயக்கம் – Danger மணி, பாடல்கள் – உமாதேவி, பத்திரிகை தொடர்பு – A.ஜான்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் செல்வகுமார் செல்லப் பாண்டியன் பேசும்போது, “ஒவ்வொரு துறையிலும் இருண்ட பக்கங்கள் இருக்கிறது. அதேபோல் நான் ஐ.டி. துறையில் பணியாற்றியபோது என் கண் முன்னால் நடந்த அதன் இருண்ட பக்கங்களின் நிகழ்வுகளை மையப்படுத்திதான் இந்தக் கதையை உருவாக்கியுள்ளேன்.
‘வார்டு-126’ என்ற தலைப்பு ஒரு முடிவின் தொடக்கமாக இருக்கும். படத்தை துவங்கிய சமயத்தில்தான் கொரோனா தாக்கம் ஆரம்பித்தது. ஆனால், அதையெல்லாம் தாண்டி பல சவால்களை சந்தித்து படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். கதை நிகழும் களமான சென்னை, பெங்களூர் மற்றும் டில்லி அருகிலுள்ள நொய்டா ஆகிய இடங்களிலும் பாடல்களை பாண்டிச்சேரியிலும் படமாக்கியுள்ளோம்.
இந்தக் கதையில் நடித்துள்ள நாயகிகள் அனைவருக்குமே சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கதையை கேட்கும்போதே உடனே ஒப்புக் கொண்டதுடன் ஒரு புதுமுக இயக்குனர் என்கிற எந்த தயக்கமும் இல்லாமல் படப்பிடிப்பில் மிகுந்த ஒத்துழைப்பு தந்தனர்.
விரைவில் இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த காத்திருப்பு காலத்தில் ஏற்கனவே கொரோனோ தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புடன் இன்னும் கூடுதல் சுமைதான் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
அதனால் தியேட்டர்களில் வெளியிட்டு உடனடியாக முதலீட்டை திரும்பப் பெறுவதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும் என முடிவு செய்துவிட்டோம். விநியோகஸ்தர்கள் சிலருடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தவிர இந்தப் படமும் தியேட்டரில் ரசிகர்கள் பார்த்து ரசிக்கும்விதமான படமாகத்தான் உருவாகியுள்ளது.
அதேசமயம் ஒடிடியில் படத்தை வெளியிடுவதற்கான வாசலையும் திறந்தே வைத்துள்ளோம். பொதுவாக ஓடிடியில் படத்தை வெளியிடுவது சுலபம் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடுவதற்கு நீண்ட நாள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. காரணம் இந்த முறையில் படத்தை வெளியிடுவதற்கும் பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன…” என்றார் செல்வகுமார் செல்லப்பாண்டியன்.
பல வெற்றி படங்களை வெளியிட்ட ஆக்சன் ரியாக்சன் ஜெனீஷ் இத்திரைப்படத்தை இம்மாத இறுதியில் உலகம் முழுவதும் திரையிட உள்ளார்.